மீண்டும் தலையெடுக்கும் மீடியா பயங்கரவாதம்!

கண்ணியத்துக்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ் தன்திருமறையில்...


(நம்மை) மறுப்போரை நாம் விட்டு வைத்திருப்பது அவர்களுக்கு நல்லது என்று அவர்கள் நினைக்க வேண்டாம். பாவத்தை அவர்கள் அதிகமாக்கிக் கொள்வதற்காகவே விட்டு வைத்துள்ளோம்.இழிவுபடுத்தும் வேதனை அவர்களுக்கு உண்டு. நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்து காட்டாமல் நீங்கள் எப்படி (கலந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்திருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல்லாஹ் விட்டு விட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவனாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான்.எனவே அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்புங்கள். நீங்கள் நம்பிக்கைக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி உண்டு (அல்குர்ஆன்: 3:178-179)

மேலோட்டமாகச் சொல்லப்படும் சம்பவங்களில் ஊடுருவி அதில் உள்ளடங்கியிருக்கும் செய்திகளை உலகுக்கு உணர்த்துவது தான் ஊடகங்கள் எனப்படுபவையாகும்.நிகழ்ந்துவிடும் சம்பவங்கள் காரியங்கள் எதுவாயிருப்பினும், யாருடையதாயிருப்பினும் உள்ளதை உள்ளபடியே விளக்கிக் காட்டும் காலக் கண்ணாடிகளாய் இருக்க வேண்டியவை தான் ஊடகங்கள் என்பவையாகும்.


ஆனால் தாம் ஏற்றிருக்கும் தொழில் தர்மத்தை புறந்தள்ளி விட்டு அற்பத்திலும் அற்ப லாபங்களுக்காக அற்பமானவர்களின் அடிவருடும் ஆபத்தை ஊடகங்கள் செய்து வருகின்றன.உண்மையின் வெளிச்சத்தைக் கொண்டு எந்த ஒன்றையும் அணுகவும் ஆய்வும் செய்திட வேண்டியவர்கள் ஓரவஞ்சனைக்கு இடந்தருவதால் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்ட மட்டுமே முடிகிறது.

மெய்யறிவையும் தொலைநோக்குப் பார்வையையும் தங்களுக்குள் நிலைப்படுத்திக் கொள்ளாத காரணத்தால் ஊடகங்கள் பலவீனங்களுக்கு பலியாகிப் போய் மக்களை ஊனப்படுத்துகின்றன.இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமிய தீவிரவாதம் ஆகிய சொற்களை மக்கள் மனதிலே பசுமரத்தாணியாய் பதிய வைத்த பெருமை ஊடங்களையே சாரும். அதிலும் குறிப்பாக அமெரிக்கா  ஐரோப்பிய ஊடகங்கள் தான் இஸ்லாமிய வளர்ச்சியை பொறுக்க முடியாமல் இந்த வார்த்தைகளைக் கட்டவிழ்த்து விட்டன. உலகில் தன் கைவசம் அதிகமான ஊடகங்களை வைத்திருக்கும் யூத சக்திகள் இதனை திட்டமிட்டே பரப்பின. உலகெங்கும் பரப்பப்பட்ட இந்த வார்த்தைகள் இந்தியாவிற்குள்ளும் திட்டமிட்டே கொண்டு வரப்பட்டன. இஸ்லாத்திற்கு எதிரான ஊடகங்களும், தங்களை நடுநிலையாளர்களாக காட்டிக் கொண்டு மக்கள் மத்தியில் வலம் வந்த ஊடகங்களும் இஸ்லாமிய தீவிர வாதிகள் பயங்கரவாதிகள் என கொஞ்சமும் கூச்சமின்றி எழுதித் தள்ளின.

 அமைதி பூங்காவாய்த் திகழும் தமிழகத்திற்குள்ளும் இந்த விஷமப் பிரச்சாரம் ஊடுவிருயது. தமிழகத்தின் அனைத்து முன்னணி சேனல்களும், பத்திரிக்கைகளும் கொஞ்சமும் அஞ்சாமல் இந்த வார்த்தைப் பிரயோகங்களைப் பயன்படுத்தின. சாதாரணமாக ஒரு பெயர் தாங்கி முஸ்லிம் மாட்டிக் கொண்டால் கூட அவனை இஸ்லாமிய பயங்கரவாதி என்றும், ஒரு கொள்ளைக் கூட்டத்தில் ஒரு முஸ்லிமும் மாட்டிக் கொண்டால் அவனுடைய பெயரைக் குறிப்பிட்டு, இஸ்லாமியன் உள்ளிட்ட 5 பேர் சிக்கினர் என்றும் செய்தி எழுதும் அவலமும் நம் தமிழகத்தில் நிகழ்ந்து வந்தது. நிலைமையின் தீவிரம் உணர்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இஸ்லாம் குறித்த சரியான புரிதலை ஊடகங்கள் மத்தியிலே மிகக் கடுமையாகக் கொண்டு சென்று சேர்த்தது. இறைவனின் மாபெரும கிருபையால் சில நாட்களாக இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற வார்த்தை ஒரளவிற்கு தவிர்க்கப்பட்டு வருகின்றது.

 இந்த நிலையில்தான் சில நாட்களுக்கு முன்பு ஒசாமா, பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்ற செய்தி ஊடகங்களில் வெளியானது. சில ஐரோப்பிய ஊடகங்களே, ஒசாமா இறந்தது போலியான செய்தி என்றும், வெளியிடப்பட்ட புகைப்படம் ஜோடிக்கப்பட்டது என்றும் செய்திகளை வெளியிட்டன. ஆனால் யூத, அமெரிக்க ஊடகங்கள் வழக்கம் போல தங்களின் பழைய பணியைச் செய்ய ஆரம்பித்தன. ஒசாமா இறந்ததாக செய்தி வெளியாகிய நாளில் இருந்து தொடர்ந்து 4 நாட்களுக்கு இதுதான் செய்தியாக இருந்தது.ஒசாமாவின் வரலாறு என்ற பெயரில் பலவிதமான ஆவணப்படங்கள் எல்லா சானல்களிலும் ஒளி பரப்பப்பட்டன. ஆனால் அது ஒசாமாவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறாமல், சாந்தி மார்க்கம் இஸ்லாத்தை குதறும் பணியை மட்டுமே மேற்கொண்டன.

புகழ்பெற்ற டிஸ்கவரி சேனலின் தமிழ் ஒளிபரப்பில் தொடர்ந்து 3 நாட்கள் ஒசாமா பற்றிய ஆவணப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. இதில் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பெயரில் அவர்களின் கற்பனைக் கதைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். மாற்றானின் கலாச்சாரங்களை இஸ்லாத்தின் மீது திணிக்காமல் தடுக்க வேண்டுமானால், அதற்கு ஒரே வழி ஆயுதமேந்துவதுதான் என்ற இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் படி தான் ஒசாமா தீவிரவாதியாக மாறினார் என தங்களின் இஸ்லாமிய காழப்புணர்ச்சியைக் காட்டியது டிஸ்கவரி சானல்.

உலக பயங்கரவாதத்தின் தலைவனான அமெரிக்கா, தன்னுடைய தீவிரவாத மையங்களை உலகம் முழுவதும் ஏற்படுத்தி உலகத்தை தன் ஆளுகையின் கீழ் கொண்டுவர திட்டமிட்டு காய் நகர்த்துகின்றது என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே! அன்றைக்கு ரஷ்யாவை எதிர்க்க வேண்டி அமெரிக்காவுக்கு தளபதியாக செயல்பட்ட ஒசாமாவின் நடவடிக்கைகள் அன்றைக்கு தீவிரவாத, பயங்கரவாத நடவடிக்கையாக அமெரிக்காவுக்குத் தெரியவில்லை. ஆனால் இஸ்லாமியர்களை அழிப்பதும், நாடு பிடிப்பதும் மட்டுமே அமெரிக்காவின் நோக்கம் என்ற அமெரிக்காவின் குரூர முகத்தை கண்டுகொண்ட ஒசாமா, அமெரிக்காவுக்கு எதிராக திரும்பியபோது, அவர் தீவிரவாதியாக, சர்வதேச பயங்கரவாதியாக அடையாளம் காட்டப்பட்டார்.

 ஆக உலக பயங்கரவாதி அமெரிக்கா செய்யும் இனச் சுத்தகரிப்பு வேலைகளும், அநியாய போர்களும் மற்ற நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதும் இந்த ஊடகங்களுக்கு பயங்கரவாதச் செயலாகத் தெரியவில்லை.ஆனால் அமெரிக்காவை எதிர்த்து போராடிய ஒருவரை பயங்கரவாதியாக சித்தரிக்கும் அமெரிக்காவிற்கு ஊதுகுழலாக இந்த ஊடகங்கள் செயல்படுகின்றன. இதன் மூலம் இஸ்லாமியர்களையும், இஸ்லாத்தையும் அழித்து விடலாம் என கனவு காணும் அமெரிக்க, ஐரோப்பியாவின்; இந்த கீழ்த்தரமான வேலைகளுக்கு நடுநிலையாக செயல்பட வேண்டிய ஊடகங்கள் பலியாவதுதான் வருந்தத்தக்க விஷயமாக இருக்கிறது.

ஒசாமா செய்தது பயங்கரவாதம் என்றால், உலகத்தை ஆள நினைக்கும் அமெரிக்கா செய்வது என்னவென்று இவர்களுக்கு புரியாமல் இல்லை.ஆனாலும் அமெரிக்க ஏகாதிபத்தியம் எழுதித்தரும் செய்திகளை ஒரு எழுத்து பிசகாமல் எழுதி தங்களின் விசுவாசத்தை காட்டும் இந்த ஊடகங்களுக்கு இது மாபெரும் தவறு என்று புரிந்து கொள்ளும் காலம் வரும்போது தான் ஊடகத்துறை தெளிவு பெறும். இன்ஷாஅல்லாஹ் அந்த காலம் விரைவிலேயே வரும்;; என்று நம்புவோம். 

மும்பை குண்டு வெடிப்பு: நகைப்புக்கிடமான நியாயங்கள்!

மும்பை குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இருந்து தப்பியோடி சவுதி அரேபியாவில் அடைக்கலம் புகுந்துள்ளதாகச் சொல்லி அவனை பிடித்து தண்டிக்க வேண்டும் என்று ஊடகங்களில் காரசாரமான வாத பிரதிவாதங்கள் நடந்து வருகின்றன. மும்பை குண்டு வெடிப்பை தாவுத் இப்ராஹிம் நடத்தி முடித்தான் என்பது எவ்வாறு உண்மை என்று சொல்கின்றார்களோ அதே அளவுக்கு சிவசேனா மற்றும் சங்பரிவார கும்பல் மும்பையில் முஸ்லிம் இனப்படுகொலையை நடத்தினார்கள் என்பதும் உண்மை.

 சிவசேனா, சங்பரிவார் நடத்திய படுகொலைக்கு பதிலடிதான் மும்பை குண்டு வெடிப்பு என்பது அனைவருக்கும் தெரியும்.அதனால் மும்பை குண்டு வெடிப்புக்காக தாவுத் இப்ராஹிம் தேடி அலையும் அளவுக்கு, அதற்கு அடிப்படையாக அமைந்த மும்பை முஸ்லிம் இனப் படுகொலைகாரர்களையும் தேடிப்பிடித்து, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிக்க வேண்டுமா? இல்லையா? இது குறித்து மத்திய அரசும் அக்கறை காட்டவில்லை.

மாநில காங்கிரஸ் அரசும் மெத்தனமாக நடந்து கொள்கிறது. தாவுத் இப்ராஹிம் குறித்து அண்டா அண்டாவாக விமர்சனம் செய்யும் ஊடகங்களும் கூட மும்பை முஸ்லிம் இனப் படுகொலையின் பதிலடிதான் மும்பை குண்டு வெடிப்பு என சொல்லாமல் இருட்டடிப்பு செய்து வருகின்றன.

மும்பை குண்டு வெடிப்பை நடத்திய தாவுத் இப்ராஹிம், நாடு நாடாக ஓடி, தலைமறைவு வாழ்க்கை நடத்தி வருகிறான். ஆனால் மராட்டியத்தில் முஸ்லிம் இனப் படுகொலைகளை நடத்திய சிவசேனா, சங்பரிவார தலைவர்கள் அரசியல் பதவிகளிலும், அரசுப் பதவிகளிலும் அமர்ந்திருக்கிறார்கள்.

 இது எவ்வளவு பெரிய கொடுமை? சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படை விதி. இந்த அடிப்படை விதிக்கு மாறாக யாரும் நடந்து கொள்ளக் கூடாது.மும்பை முஸ்லிம் இனப் படுகொலையை நடத்திய பால்தாக்கரே மற்றும் சங்பரிவாரங்களுக்கு ஒரு நீதி. மும்பை குண்டு வெடிப்பை நடத்திய தாவுத்துக்கு இன்னொரு நீதி என்பது மனுதர்மத்திற்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம். உண்மையான நீதிக்கு இது ஒரு காலத்திலும் ஒத்து வராது.

தாவுத் இப்ராஹிம் தண்டிக்கப்பட வேண்டும். அதற்கு முன்பாக அவனை குண்டு வைக்கத் தூண்டிய சங்பரிவார தலைவர்களும் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும்.இதில் ஒருவர் மட்டும் தண்டிக்கப்பட்டு, மற்றவர் விடுவிக்கப்படுவது நாட்டிற்கு ஆபத்து. நாட்டு மக்களுக்கு ஆபத்து. இதை ஆள்வோர் தெரிந்து நடவடிக்கை எடுப்பார்களா?

மகத்தான அதிபதி அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:

 அநீதி இழைத்தோர் செய்து கொண்டிருப்பவற்றை அல்லாஹ் கவனிக்காதவன் என்று எண்ணி விடாதீர். பார்வைகள் நிலை குத்தி நிற்கும் ஒரு நாளுக்காகவே அவர்களை அல்லாஹ் தாமதப்படுத்தியிருக்கிறான்.

(அந்நாளில்) தமது தலைகளை உயர்த்தியோராக தறிகெட்டு ஓடுவார்கள். (நிலை குத்திய) அவர்களின் பார்வை பழைய நிலைக்குத் திரும்பாது. அவர்களின் உள்ளங்களும் செயலற்று விடும்.

அவர்களை வேதனைப்படுத்தும் நாளைப் பற்றி மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அந்நாளில்) எங்கள் இறைவா! குறைந்த காலம் எங்களுக்கு அவகாசம் அளிப்பாயாக! உனது அழைப்பை ஏற்றுக் கொள்கிறோம். தூதர்களைப் பின் பற்றுகிறோம் என்று அநீதி இழைத்தோர் கூறுவார்கள். உங்களுக்கு அழிவே வராது என்று இதற்கு முன் சத்தியம் செய்து நீங்கள் கூறிக் கொண்டிருக்கவில்லையா? (அல்குர்ஆன்: 14 : 42-44)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், தமது அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்களிடம் சென்று, நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகின்றார்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கலாம். அவர்தான் உண்மையை பேசியுள்ளார் எனக் கருதி, நான் அவருக்கு சாதகமாகத் தீர்;ப்பளித்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லீமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி நான் தீர்ப்பளிக்கின்றேனோ அது அவருக்கு நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும் அவன் விரும்பினால் அதை எடுத்துக் கொள்ளட்டும். அல்லது அதை விட்டு விடட்டும் என்று கூறினார்கள்.(அறிவிப்பவர்: உம்முஸலமா(ரலி) புகாரி 2458)

நன்நம்பிக்கைக் கொண்டவர்களே! (வழிதவறி விடாமல்) உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நேர்வழி பெற்றுவிட்டால், நேர்வழியை விட்டு தவறியவர் உங்களுக்கு இடையூறு அளிக்க வேண்டாம். (அல்குர்ஆன்: 5:105) 

நான் அல்லாஹ்வின் தூதர்)ஸல்)அவர்கள் கூற கேட்டுள்ளேன். நிச்சயமாக மக்கள் அநியாயம் புரிபவனைப் பார்த்து விட்டு அவன் கரங்களைப் பிடித்து திருத்தவில்லை என்றால் அல்லாஹ் தனது வேதனையைக் கொண்டு அம்மக்கள் அனைவரையும் பொதுவாகப் பிடித்து விடக் கூடும்.(அபூபக்கர் (ரலி) புகாரி)

அல்லாஹ் கூறுகிறான்: 
எச்சரிக்கை! அக்கிரமக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! (அல்குர்ஆன் 11:18)

நான் இப்னு உமர்(ரலி) அவர்களுடன் அவர்களுடைய கையை பிடித்தப்படி சென்று கொண்டிருந்தபோது ஒரு மனிதர் குறுக்கிட்டு, (மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்குமிடையே நடைபெறும்) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள்? என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் அவர்கள் அல்லாஹூதஆலா மூஃமினை தன் பக்கம் நெருங்கச் செய்து அவன் மீது தன் திரையை போட்டு அவனை மறைத்து விடுவான். பிறகு அவனை நோக்கி நீ இன்ன பாவம் செய்தாய் உனக்கு நினைவிருக்கிறதா? என்று கேட்பான். அதற்கு அவன், ஆம் என் இறைவா! என்று கூறவான். (இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி) அவன் (தான் செய்த) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ள செய்வான். அந்த மூஃமின் நாம் இத்தோடு ஒழிந்தோம் என்று தன்னைப் பற்றி கருதிக் கொண்டிருக்கும் போது இறைவன் இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்கு தெரியாமல் வைத்திருந்தேன். இன்று உனக்குஅவற்றை மன்னித்து விடுகிறேன் என்று கூறுவான். அப்போது அவனது நற்செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும். நிராகரிப்பாளர்களையும், நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள், இவர்கள் தாம் தம் இறைவன் மீது பொய்யைப் புளைத்துரைத்தவர்கள் எச்சரிக்கை! இத்தகைய அக்கிரமகாரர்கள் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும் என்று கூறுவார்கள். (ஸஃப்வான் பின் முஹ்லிஸ் அல் மாஸினி(புகாரி 2441)

 எனவே மனித சமுதாயத்தின் எந்த பிரிவை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அநீதத்திற்கு இடம் தராதீர்கள். கொஞ்சமும் அசைந்து விடாதீர்கள். உங்களை சார்ந்தவர்களுக்கு ஒரு நீதி, வேண்டாதவர்களுக்கு ஒரு நீதி என்ற பாகுபாட்டை கொண்டு வராதீர்கள். ஆள்பலத்தினாலும், வாக்கு சாதுரியத்தினாலும் உலகில் நீங்கள் வென்று விடலாம். சத்தியத்தின் முன் தலைகுனிவுதான் உங்களுக்கு.
  

அன்புடன் வெளியிடுவோர்...  

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 
தெற்குதெரு கிளை.
கீழக்கரை.

Post a Comment

0 Comments