ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 02)

ஜிஹாதின் அர்த்தங்கள்.
(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். RASMIN M.I.Sc )

"ஜிஹாத்' என்பதற்கு உழைத்தல், பாடுபடுதல் என்ற பொருளும், வற்புறுத்துதல், கட்டாயப்படுத்துதல் என்ற பொருளும் உள்ளது என்பதற்கு ஆதாரமான திருக்குர்ஆன் வசனங்களை சென்ற இதழில் கண்டோம்.  மேலும் பல அர்த்தங்களை உள்ளடக்கிய வசனங்களைக் காண்போம்.

உறுதி.

ஜிஹாத் என்பதற்கு உறுதி என்ற பொருள் தரக் கூடிய பல வசனங்கள் திருக்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன.  அது சம்பந்தமான வசனங்களைக் காண்போம்.

"நாங்களும் உங்களைச் சேர்ந்தோரே' என அல்லாஹ் மீது உறுதியாகச் சத்தியம் செய்தோர் இவர்கள் தாமா? என்று நம்பிக்கை கொண்டோர் (மறுமையில் வியப்புடன்) கூறுவார்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. நஷ்டமடைந்தோரில் அவர்களும் ஆகி விட்டனர்.  (அல்குர்ஆன் 5:53)

"எங்களிடம் அற்புதம் வந்தால் அதை நம்புவோம்'' என்று அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்து அவர்கள் கூறுகின்றனர். அற்புதங்கள் அல்லாஹ்விடமே உள்ளன என (முஹம்மதே!) கூறுவீராக! அது நிகழும் போது அவர்கள் நம்ப மாட்டார்கள் என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?  (அல்குர்ஆன் 6:109)

இறந்தோரை அல்லாஹ் மீண்டும் உயிர்ப்பிக்க மாட்டான் என்று அல்லாஹ்வின் மீதே உறுதியாக சத்தியம் செய்து கூறுகின்றனர். அவ்வாறில்லை! இது அவனது உண்மையான வாக்குறுதி. எனினும் அதிகமான மனிதர்கள் அறிய மாட்டார்கள்.  (அல்குர்ஆன் 16:38)

(முஹம்மதே!) அவர்களுக்கு நீர் கட்டளையிட்டால் தாங்கள் (போருக்கு) புறப்படுவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்கின்றனர். "சத்தியம் செய்யாதீர்கள்! அழகிய முறையில் கட்டுப்படுதலே (அவசியமாகும்.) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன்'' என்று கூறுவீராக!  (அல்குர்ஆன் 24:53)

தங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வந்தால் எந்த ஒரு சமுதாயத்தையும் விட தாங்கள் நேர் வழி பெற்றோர் ஆவதாக அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தார்கள். அவர்களிடம் எச்சரிக்கை செய்பவர் வந்த போது அது அவர்களுக்கு வெறுப்பையும், பூமியில் பெருமையடிப்பதையும், கெட்ட சூழ்ச்சியையும் தவிர (வேறு எதையும்) அதிகமாக்கவில்லை. கெட்ட சூழ்ச்சி அதைச் செய்தோரையே சூழ்ந்து கொள்ளும். முன்னோர்களின் கதியைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அல்லாஹ்வின் நடைமுறையில் எந்த மாற்றத்தையும் காணமாட்டீர்! அல்லாஹ்வின் நடைமுறையில் எந்தத் திருப்பத்தையும் காண மாட்டீர்.     (அல்குர்ஆன் 35:42,43)

மேற்கண்ட வசனங்கள் அனைத்திலுமே "உறுதியாக'' என்ற பொருள்பட அல்லாஹ்வின் மீது செய்யப்பட்ட சத்தியத்தின் வலிமையைக் காட்டுவதற்கு "ஜஹத' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த இடங்களிலெல்லாம் "ஜஹத' என்பதற்கு ஆயுதமேந்திப் போரிடுதல் என்ற அர்த்தம் செய்தால் "அல்லாஹ்வின் மீது ஆயுதமேந்திப் போரிட்டு'' சத்தியம் செய்தார்கள் என்று விபரீதமான பொருளைத் தந்து விடும். (நவூதுபில்லாஹ்)  அது போல் முன்பு செய்யப்பட்ட உழைப்பு, கட்டாயப் படுத்துதல் போன்ற வார்த்தைகளும் இந்த இடத்திற்குப் பொருந்தாது.  எனவே இந்த வசனங்களின் மூலம் ஜிஹாத் என்பதற்கு "உறுதி' என்ற அர்த்தமும் உள்ளது என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.

அழைப்புப் பணியில் ஈடுபடுதல்.

"ஜிஹாத்' என்பதற்கு "அறப்போர்' என்ற பொருளடங்கிய வசனங்களையும், சத்தியத்தை எடுத்துரைத்து பிரச்சாரப் பணியில் ஈடுபடுவதும் அறப்போர் தான் என்பதற்கான குர்ஆன் வசனங்களையும் காண்போம்.

அல்லாஹ்வுக்காக அறப்போர் செய்ய வேண்டிய விதத்தில் அறப்போர் செய்யுங்கள்! இந்தத் தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும், நீங்கள் ஏனைய மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும், அவன் உங்களைத் தேர்ந்தெடுத்தான். (அல்குர்ஆன் 22:78)

இந்த வசனத்தின் மூலம் தஃவா - அழைப்புப் பணி செய்வதும் "ஜிஹாத்' தான் என்பதை தெளிவாக விளங்க முடியும். மேலும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இந்தப் பணி எவ்வளவு முக்கியம் என்பதையும் இந்த வசனத்தின் மூலம் அறிய முடிகிறது.

அல்லாஹ்வுக்காக ஜிஹாத் - அறப்போர் செய்ய வேண்டும் என்று கூறும் இறைவன், அதை எவ்விதத்தில் செய்ய வேண்டும் என்பதையும் இந்த வசனத்தில் விளக்குகிறான். நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு சத்தியப் பிரச்சாரம் செய்ததையும், அந்த சத்தியத்தை அறிந்து கொண்டவர்கள் அறியாத மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதையும், இதுவே அறப்போர் - ஜிஹாத் செய்யும் விதம் என்பதையும் இந்த வசனம் தெளிவுபடுத்துகிறது.

எனவே (ஏக இறைவனை) மறுப்போருக்கு நீர் கட்டுப்படாதீர்! இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் கடுமையாகப் போரிடுவீராக! (அல்குர்ஆன் 25:52)

இந்த வசனத்திலும் "போரிடுதல்' என்ற அர்த்தத்தில் "ஜிஹாத்' என்ற வார்த்தை இடம் பெறுகிறது. ஆனால் இந்த வசனம் "குர்ஆன் மூலம் போரிடுங்கள்'' என்று சொல்வதிலிருந்து, ஆயுதமேந்திப் போரிடுதல் என்று விளங்க முடியாது.

குர்ஆனைக் கொண்டு கடுமையாகப் போரிட வேண்டும் என்பதற்கு, குர்ஆனில் இறைவன் அருளியுள்ள சத்தியத்தைக் கொண்டு கடுமையான பிரச்சாரம் செய்வது என்பதே பொருள்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்..........

Post a Comment

0 Comments