ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 06) ஜிஹாதும், கிதாலும்.


(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். Rasmin M.I.Sc )


"ஜிஹாத்' என்றாலே முஸ்லிம் அல்லாதவர்களை முஸ்லிம்கள் அழிப்பதற்குப் பயன்படுத்தும் வார்த்தை என்ற தவறான கருத்து இன்று உலகம் முழுவதும் நிலவி வருகின்றது.  இன்னும் சொல்லப் போனால் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்வோர் சிலர் கூட இந்தக் கருத்தைத் தான் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய தவறான கருத்து நிலவுவதற்கு மிக முக்கிய காரணம் மேற்கத்திய ஏதேச்சதிகார சக்திகளின் ஊதுகுழலாய் விளங்கக் கூடிய தகவல் தொடர்பு சாதனங்களும், முஸ்லிம்களிடம் ஜிஹாதைப் பற்றிய சரியான புரிந்துணர்வு இல்லாமையும் தான்.  இந்தத் தவறான கருத்துக்கு சாவு மணி அடிக்கின்ற வகையில் திருக்குர்ஆனும், ஹதீஸ்களும் அமைந்துள்ளன.

அல்லாஹ்வின் பாதையில் - அவனது திருப் பொருத்தத்தை நாடி செய்யக் கூடிய பல்வேறு நற்செயல்களும், பொதுவாக "ஜிஹாத்' என்ற வார்த்தை வட்டத்திற்குள் வந்தாலும் அந்தந்த செயல்களைக் குறிக்கக் கூடிய நேரடி வார்த்தைகளும் உள்ளன என்று நாம் பார்த்தோம்.  (உதாரணம் : அழைப்புப் பணி (தஃவா), நீதிக்குக் குரல் கொடுப்பது போன்றவை)  

அதே போல் நியாயமான காரணங்களுக்காக அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் இட்ட கட்டளையை ஏற்று, ஆயுதமேந்திப் போரிடுவதும், போர்க்களங்களில் எதிரிகளைச் சந்திக்கும் போது அவர்களை வெட்டி வீழ்த்துவதும் அல்லது எதிரிகளால் வெட்டப்படுவதும் "ஜிஹாத்' என்று பொதுவாக அழைக்கப் பட்டாலும் அச்செயல்களுக்குரிய நேரடி வார்த்தை "கிதால்' என்பதாகும்.  அதற்கான சான்றுகளை திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் காண்போம்.

ஆயுதமேந்திப் போரிடுவதற்கும், போரில் எதிரிகளை வெட்டுவதற்கும், அல்லது எதிரிகளால் வெட்டப்படுவதற்கும், திருக்குர்ஆனில் "கிதால்' என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகின்றது.  "கிதால்' என்ற வார்த்தையை உள்ளடக்கிய ஏராளமான வசனங்கள் உள்ளன.  உதாரணத்திற்கு சில வசனங்களைக் காண்போம்.

ஆயுதமேந்திப் போரிடுதல்.

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ் வரம்பு மீறியோரை நேசிக்க மாட்டான்.  (அல்குர்ஆன் 2:190)

மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? "எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்''என்று தமது நபியிடம் கூறினர். "உங்களுக்குப் போர்கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்க மாட்டீர்கள் அல்லவா?'' என்று அவர் கேட்டார். "எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில்போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது?'' என்று அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அல்லாஹ் அநீதி இழைத்தோரை அறிந்தவன்.  (அல்குர்ஆன் 2:246)

இரண்டு அணியினர் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டதில் உங்களுக்குச் சான்று உள்ளது. ஓர் அணியினர் அல்லாஹ்வின் பாதையில்போரிட்டனர். (ஏக இறைவனை) மறுப்போராக மற்றொரு அணியினர் இருந்தனர். தம்மைப் போல் இரு மடங்காக கண்களால் அவர்களைக் கண்டனர். தான் நாடியோரைத் தன் உதவியின் மூலம் அல்லாஹ் வலுப்படுத்துகிறான். அறிவுடையோருக்கு இதில் பாடம் உள்ளது.  (அல்குர்ஆன் 3:13)

தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர்செய்ய வேண்டாமா? அவர்களுக்கு அஞ்சுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் நீங்கள் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே அதிகத் தகுதியுள்ளவன்.  அவர்களுடன் போர் செய்யுங்கள்! உங்கள் கைகளால் அல்லாஹ் அவர்களைத் தண்டிப்பான். அவர்களை இழிவு படுத்துவான். அவர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவுவான். நம்பிக்கை கொண்ட சமுதாயத்தின் உள்ளங்களுக்கு அவன் ஆறுதல் அளிப்பான். (அல்குர்ஆன் 9:13, 14)

நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர்.(ஏக இறைவனை) மறுப்போர் தீய சக்திகளின் பாதையில்போரிடுகின்றனர். எனவே ஷைத்தானின் கூட்டாளிகளுக்கு எதிராகப்போரிடுங்கள்! ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாக உள்ளது.  (அல்குர்ஆன் 4:76)

"போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்' என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப் பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன்.  (அல்குர்ஆன் 22:39)

(ஏக இறைவனை) மறுத்தோர் உங்களுடன் போருக்கு வந்தால், புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர் பொறுப்பாளனையோ உதவி செய்பவனையோ காண மாட்டார்கள்.  (அல்குர்ஆன் 48:22)

மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர், உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றியோர், உங்களை வெளியேற்றுவதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான்.  அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்.

(அல்குர்ஆன் 60:9)

மேற்கண்ட வசனங்களில் ஆயுதமேந்திப் போரிடுவதற்கு "கிதால்' (சிகப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளவைகள்) என்ற வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளதால், ஆயுதமேந்திப் போரிடுவதற்கான நேரடி அரபுச் சொல் "கிதால்' என்பதைத் தெளிவாக விளங்க முடிகின்றது.

போரில் கொல்லுதல், கொல்லப்படுதல்.

அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் எனக் கூறாதீர்கள்! மாறாக உயிருடன் உள்ளனர். எனினும் உணர மாட்டீர்கள்.
(அல்குர்ஆன் 2:154)

(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக்கொல்லுங்கள்!  (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.  (அல்குர்ஆன் 2:191)

நம்பிக்கை கொண்டோரே! பயணம் மேற்கொண்ட, அல்லது போருக்குச் சென்ற தம் சகோதரர்களைக் குறித்து "அவர்கள் நம்முடன் இருந்திருந்தால் இறந்திருக்க மாட்டார்கள். கொல்லப்பட்டிருக்கவும்மாட்டார்கள்'' என்று கூறிய (ஏக இறைவனை) மறுத்தோரைப் போல் நீங்கள் ஆகி விடாதீர்கள்! அவர்களின் உள்ளங்களில் கவலையை ஏற்படுத்தவே அல்லாஹ் இதைச் செய்தான். அல்லாஹ்வே உயிர்ப்பிக்கிறான். மரணிக்கச் செய்கிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன்.  அல்லாஹ்வின் பாதையில் நீங்கள்கொல்லப்பட்டாலோ, மரணித்தாலோ அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் மன்னிப்பும், அருளும் அவர்கள் திரட்டிக் கொண்டிருப்பவற்றை விடச் சிறந்தது.  நீங்கள் இறந்தாலோ, கொல்லப் பட்டாலோ அல்லாஹ்விடமே ஒன்று திரட்டப்படுவீர்கள்.  (அல்குர்ஆன் 3:156-158)

"அவர்கள் நமக்குக் கட்டுப்பட்டு இருந்தால் கொல்லப்பட்டிருக்கமாட்டார்கள்'' என்று போருக்குச் செல்லாதோர், தம் சகோதரர்கள் பற்றி கூறினர். "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களை விட்டு மரணத்தைத் தடுத்துப் பாருங்கள்!'' என்று கூறுவீராக!  அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர்.  (அல்குர்ஆன் 3:168, 169)

இவ்வுலக வாழ்வை விற்று மறுமையை வாங்குவோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும்! யாரேனும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டாலோ வெற்றி பெற்றாலோ அவர்களுக்கு மகத்தான கூலியை வழங்குவோம்.  (அல்குர்ஆன் 4:74)

அவர்கள் உங்களிடமும் அபயம் பெற்று, தமது சமுதாயத்தினரிடமும் அபயம் பெறுவதை விரும்புகின்றனர். கலகம் செய்ய அவர்கள் அழைக்கப்படும் போதெல்லாம் அதில் தீவிரமாக ஈடுபடுகின்றனர். அவர்கள் உங்களை விட்டு விலகிக் கொள்ளாமலும், உங்களிடம் சமாதானத்துக்கு வராமலும் இருந்தால் மேலும் தமது கைகளைக் கட்டுக்குள் வைக்கவில்லையானால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்டவுடன் கொல்லுங்கள்! அவர்களுக்கு எதிராக (போரிட) தெளிவான சான்றை ஏற்படுத்தியுள்ளோம்.  (அல்குர்ஆன் 4:91)

நம்பிக்கை கொண்டவனை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகம். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொள்கிறான். அவனைச் சபிக்கிறான்.  அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான். (அல்குர்ஆன் 4:93)

நம்பிக்கை கொண்டோரிடமிருந்து அவர்களின் உயிர்களையும், செல்வங்களையும் அவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்று அல்லாஹ் விலைக்கு வாங்கிக் கொண்டான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். அவர்கள் கொல்கின்றனர்; கொல்லப்படுகின்றனர். இது, தவ்ராத், இஞ்சீல், மற்றும் குர்ஆனில் அவன் தன் மீது கடமையாக்கிக் கொண்ட வாக்குறுதி. அல்லாஹ்வை விட தன் வாக்குறுதியை நிறைவேற்றுபவன் யார்? நீங்கள் ஒப்பந்தம் செய்த இந்த வியாபாரத்தில் மகிழ்ச்சியடையுங்கள்! இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:111)

அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்து பின்னர் கொல்லப்படுவோர்,அல்லது மரணிப்போருக்கு அல்லாஹ் அழகிய உணவை வழங்குவான். அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்.   (அல்குர்ஆன் 22:58)

அவர்கள் சபிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் எங்கு காணப்பட்டாலும் பிடிக்கப்பட்டு கொன்றொழிக்கப்படுவார்கள்.  (அல்குர்ஆன் 33:61)

மேற்கண்ட வசனங்களில் கொலை, கொல்லுதல், கொல்லப்படுதல் என்ற அர்த்தத்தில் "கத்ல்' (சிகப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளவைகள்) என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.  இவ்வசனங்களிலிருந்து ஆயுதமேந்திப் போரிடுவதற்கும், அந்தப் போரின் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் நேரடி வார்த்தை "கத்ல்' என்பதையும், இந்த "கத்ல்' என்ற செயல் "ஜிஹாத்' என்னும் பரந்து விரிந்த சொல்-ல் அடக்கம் என்பதையும் தெளிவாக விளங்க முடிகின்றது.

"ஜிஹாத்' என்பதன் முழுமையான அர்த்தத்தை விளங்காதவர்கள், அதன் ஏனைய அம்சங்களை விட்டு விட்டு, ஜிஹாதை குறுகிய வட்டத்திற்குள் அடைத்து, ஆயுதமேந்திப் போரிடுவது மட்டும் தான் "ஜிஹாத்' என்ற தவறான சித்திரத்தை வடித்துள்ளனர்.  ஆயுதமேந்திப் போரிடுவதை மட்டும் குறிப்பிடக் கூடியவர்கள் - அத்தகைய போருக்கு அழைப்பவர்கள், "ஜிஹாத்' என்ற வார்த்தைக்குப் பதிலாக "கிதால்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதே சாலச் சிறந்தது.  இதனால் ஜிஹாத் என்பதற்குத் தவறான வர்ணம் பூசப்படுவதைத் தடுக்க முடியும்.

இதுவரை ஜிஹாத் என்றால் என்ன? என்பதை விரிவாகப் பார்த்தோம்.  ஜிஹாதின் முக்கிய ஓர் அம்சமான ஆயுதமேந்திப் போரிடுதல் பற்றி இனி விரிவாகப் பார்ப்போம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.........

Post a Comment

0 Comments