ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 07) ஆயுதம் ஏந்திப் பேரிடுதல்.



(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். Rasmin M.I.Sc )



"ஜிஹாத்'' என்றால் என்ன? என்னென்ன நற்செயல்கள் எல்லாம் "ஜிஹாத்' என்ற வட்டத்திற்குள் வருகிறது என்பதையும் நடைமுறையில் ஜிஹாத் என்றாலே ஆயுதந்தாங்கிப் போரிடுவது மட்டும் தான் என்று விளங்கி வைத்திருப்பது தவறு என்பதையும் இதுவரை குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுடன் பார்த்தோம்.

ஜிஹாதின் முக்கிய ஓர் அங்கமான "கிதால்' (ஆயுதம் ஏந்திப் போரிடுதல்) பற்றி இனி விரிவாக நாம் பார்ப்போம்.
முஸ்லிம்கள் ஆயுதமேந்திப் போரிடுவதை வலியுறுத்தும் ஏராளமான வசனங்கள் திருமறைக் குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. உதாரணத்திற்கு சென்ற தொடரில் நாம் மேற்கோள்காட்டியிருந்த வசனங்களே போதுமானவை.
ஆயுதமேந்திப் போரிடுவதை கடமை என உணர்த்தும் இறைவன், தான்தோன்றித்தனமாக ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு, நினைத்த மாத்திரத்தில், நினைத்தவர்களையெல்லாம் வெட்டிச் சாய்க்கும் படியோ, ஜிஹாத் என்று சொல்லிக் கொண்டு, கொலை - கொள்ளையில் ஈடுபடும்படியோ, வீண் சண்டையில் இறங்கும்படியோ விட்டு விடவில்லை.

இஸ்லாத்தின் கடமைகளை நிறைவேற்றச் சொல்லும் இறைவன் ஒவ்வொரு கடமைக்கும் ஒழுங்கு, கட்டுப்பாடு, விதிமுறைகள், விதிவிலக்குகளை அளித்தே இருக்கிறான்.

இஸ்லாத்தின் முதல் கடமையான தொழுகை இருக்கிறதென்றால், அந்தத் தொழுகையை எப்படி நிறைவேற்ற வேண்டும், எப்படித் தொழுதால் அந்தத் தொழுகை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதை தனது திருத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மூலம் நமக்குக் காட்டித் தந்துள்ளான்.

இறைவன் நம்மைத் தொழச் சொல்லி விட்டான் என்பதற்காக நாம் நினைத்த நேரத்தில், நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்தில், நினைத்த முறையில் தொழுதுவிட முடியாது. அவ்வாறு செய்தால் அது இறைவனால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படாது என்பது மட்டுமல்லாமல் அது போலச் செய்வது நமக்கு மறுமையில் தண்டனையைத்தான் பரிசாகப் பெற்றுத் தரும்.

"தொழுகையை நிலை நாட்டுங்கள்' என்று சொல்லக் கூடிய வசனங்கள் திருக்குர்ஆனில் ஏராளமான இடங்களில் இடம் பெற்றுள்ளன. ஆனால், தொழுவதற்கு முன் "உளு'ச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தக்கூடிய வசனம் ஓரிரு இடங்களில் மட்டுமே இடம் பெற்றுள்ளன. இதிலிருந்து தொழுகைக்கு முன் உளு அவசியம் என்ற விதிமுறையை நாம் உணருகிறோம். அது போல நான் இறைவனைத் தொழப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டு, நினைத்த நேரத்தில் தொழ முடியாது. ஏனென்றால் தொழுகைக்கான நேரம் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல, தொழுவதற்குத் தடைச் செய்யப்பட்ட நேரமும் இருக்கிறது. அதுபோல ஆண், பெண் இருபாலர் மீதும் தொழுகை கடமை என்பதற்காக ஒரு பெண் தனது மாதவிடாய் காலத்திலும், நான் தொழுவேன் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் மாதவிடாய் காலத்தில் தொழுவது தடைச் செய்யப்பட்டுள்ளது.

அதுபோல இஸ்லாத்தின் மற்றொரு கடமையான நோன்பு. இறைவன் நோன்பு வைக்கச் சொல்லிவிட்டான் என்று சொல்லிக் கொண்டு, 24 மணி நேரமும் பட்டினி கிடந்துவிட முடியாது. நோன்பு வைக்கும் நேரத்தையும், நோன்பு திறக்கும் நேரத்தையும் நம் விருப்பப்படி தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியாது. வெள்ளிக்கிழமைக்கென்று நோன்பு வைக்க முடியாது. பெருநாள் தினங்களில் நோன்பு வைக்க முடியாது. மாவிடாய் காலங்களில் பெண்கள் நோன்பு வைக்க முடியாது. இவற்றுக் கெல்லாம் தெளிவான தடையிருப்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை.

நோன்பு வைத்துள்ள ஒருவர், நோன்பாளிகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை மீறி, தன் விருப்பப்படி செயல்பட முடியாது.

ஆக, நோன்பை கடமையாக்கிய இறைவன், அதற்கான ஒழுங்குகளையும், விதிமுறைகளையும், விதிவிலக்குகளையும் நமக்கு அளித்துள்ளான். அதைப் புரிந்து கொண்டுதான் நாம் அக்கடமையை நிறைவேற்ற வேண்டும். மாறாக. அதைப் புரிந்து கொள்ளாமலோ, அல்லது தவறாகப் புரிந்து கொண்டோ நோன்பை நிறைவேற்ற நினைத்தால், அது இறைவனிடமிருந்து நமக்கு நன்மைக்குப் பதிலாக தண்டனையைத்தான் பரிசாகப் பெற்றுத் தரும்.

அதுபோல, இஸ்லாமியக் கடமைகளில் மற்றொன்று ஜகாத். அதைக் கடமையாக்கிய இறைவன், நாம் நினைத்த மாத்திரத்தில், நமது விருப்பப்படி நாம் விரும்பியவர்களுக்கு ஜகாத்தை நிறைவேற்றும்படி விட்டுவிடவில்லை.

ஜகாத் யார் கொடுக்க வேண்டும். எவ்வளவு கொடுக்க வேண்டும். அதை எப்போது கொடுக்க வேண்டும். யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறைகளையும் இறைவன் அளித்துள்ளான். அந்த விதிமுறைகளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அல்லது தவறாகப் புரிந்து கொண்டு ஜகாத் என்ற கடமையை நம் விருப்பப்படி நிறைவேற்றினால் அது இறைவனால் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மாறாக இறைக் கட்டளையை புறக்கணித்த குற்றம் தான் நமக்கு வந்து சேரும்.

 இவ்வாறே இஸ்லாத்தின் மற்றொரு கடமையான ஹஜ். ஒரு முஸ்லிம் தன் வாழ்நாளில் குறைந்தது ஒரு முறை புனித மக்காவுக்குச் சென்று ஹஜ் செய்ய வேண்டும் என்று இறைவன் கூறுகிறான் என்று சொல்லிக் கொண்டு, ஊர் முழுவதும் கடனை வாங்கிக் கொண்டு மக்காவுக்குச் செல்ல முடியாது. நோய் வாய்ப்பட்டவர் நடக்கவே சக்தி பெறாதவர் நான் ஹஜ் செய்தாக வேண்டும் என்று கூறிக் கொண்டு, ஸ்ட்ரச்சரில் படுத்துக்கொண்டு போக முடியாது.

ஹஜ்ஜைக் கடமையாக்கிய இறைவன், அதை யார் செய்ய வேண்டும். அவர்கள் எத்தகைய தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறைகளை வகுத்துள்ளான்.

ஹஜ்ஜுக்காக ஒருவர் புறப்பட்ட பின் இஹ்ராம் கட்டுவதிலிருந்து அவர் ஹஜ்ஜுக்கான கிரியைகளை முழுவதுமாக நிறைவு செய்வது வரை ஒவ்வொரு கட்டங்களிலும் என்னென்ன முறைகளைக் கையாள வேண்டும் என்ற ஒழுங்குமுறைகள்  உள்ளன. அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல். 

நம் விருப்பப்படி ஹஜ்ஜுடைய கிரியைகளை அமைத்துக் கொள்ள முடியாது. ஹஜ்ஜுக்கான விதிமுறைகளைப் புரிந்து அதன்படி செய்யும் போதுதான் நாம் ஹஜ்ஜை நிறைவேற்றியதாக கருத முடியும்.

குர்பானியும் அதுபோலத்தான். குர்பானி கொடுப்பதற்கென்றே விதிமுறைகள் உள்ளன. இறைவன் குர்பானி கொடுக்கச் சொல்லிவிட்டான் என்பதற்காக நாம் எந்தப் பிராணியையும் பிடித்து அறுத்து குர்பானி கொடுத்துவிட முடியாது. நாம் நினைக்கும் போது, நினைக்கும் நாளில் குர்பானி கொடுக்க முடியாது. குர்பானி கொடுக்கும்படி அல்லாஹ் சொல்லிவிட்டான் என்பதற்காக, நம்மிடம் அதற்குரிய சக்தி இல்லாத நிலையில், அடுத்தவன் வீட்டு ஆட்டையோ அல்லது மாட்டையோ, அல்லது தெருவில் திரியும் கால்நடைகளையோ பிடித்து வந்து அறுக்க முடியாது.

குர்பானி கொடுக்க வேண்டும் என்று கட்டளையிடும் இறைவன், அதற்கான தகுதியையும், ஒழுங்கையும், விதிமுறைகளையும் கூறியிருக்கிறான். அந்த விதிமுறைகளைப் பின்பற்றாமல் கொடுக்கப்படும் குர்பானி இறைவனிடமிருந்து சொர்க்கத்திற்குப் பதிலாக நரகத்தைப் பரிசாகத் தரும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

நாம் மேலே கூறியுள்ள உதாரணங்களிலிருந்து, இஸ்லாத்தின் பெயரால் செய்யக்கூடிய எந்த நற்செயல்களாக இருந்தாலும், அந்தச் செயலைச் செய்யும்படி வலியுறுத்திய இஸ்லாம், அவற்றுக்கான ஒழுங்குகள், வரம்புகள், கட்டுப்பாடுகள், செயல்முறைகள், விதிவிலக்குகள் ஆகியவற்றுடன் கூடிய வழிமுறைகளை, விதிமுறைகளாக்கியே வைத்திருக்கிறது. அந்த வழிகாட்டல்களைச் சரியாகப் புரிந்து, அதன்படியே நம்முடைய அமல்களை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

அதேபோல் "ஜிஹாத்' என்று அழைக்கப்படும் "கிதால்' (ஆயுதமேந்திப் போரிடுதல்) என்ற நற்செயலுக்கும், இஸ்லாம் பல்வேறு வழிகாட்டல்களையும், வரம்புகளையும், கட்டுப்பாடுகளையும், நிபந்தனைகளையும், விதிவிலக்குகளையும் உள்ளடக்கிய விதிமுறைகளை அறிமுகப்படுத்திய பிறகே அச்செயலைச் செய்யும்படி வலியுறுத்துகிறது.

நாம் மேலே குறிப்பிட்ட "ஜிஹாத்' அல்லாத ஏனைய நற்செயல்களைப் பொறுத்தவரை, முஸ்லிம்கள் அதன் விதிமுறைகளை நன்றாக விளங்கி, அதன்படி அமல் செய்ய வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக உள்ளனர்.

ஆனால் "ஜிஹாத்' விஷயத்தில் மட்டும், இறைவனும், இறைத்தூதர் (ஸல்) அவர்களும் நமக்குக் காட்டியுள்ள விதிமுறைகளைச் சரியாகப் புரிந்து, அதன்படி செயலாற்ற பெரும்பாலான முஸ்லிம்கள் தவறி விடுகிறோம்.

"ஜிஹாத்' அல்லாத ஏனைய வணக்க வழிபாடு சம்பந்தமான விஷயங்களில் "மஸாயில்' (மார்க்கச்சட்டம்) பிரச்சனையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும், அவற்றால் மிகப்பெரிய ஆபத்தோ, உயிரிழப்புகளோ ஏற்பட வாய்ப்பில்லை.

ஆனால் ஜிஹாத் (கிதால்) சம்பந்தமான விஷயத்தில் மிக மிக அதிகமான கவனம் செலுத்த வேண்டும். பல முறை ஆய்வு செய்து, சரியான - தெளிவான விளக்கத்தைப் பெற வேண்டும். மாறாக இவ்விஷயத்தில் நுனிப்புல் மேய்ந்தால், அதன் விளைவு மிக மோசமானதாக அமைந்துவிடும்.

இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும் பாதுகாப்புக் கேடயமாக விளங்க வேண்டிய ஜிஹாத் (கிதால்) இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அழிக்கக் கூடிய ஆயுதமாக அமைந்துவிடும்.

இறைவனிடத்தில் சொர்க்கத்தைப் பரிசாகப் பெறும் நோக்கத்தில் செய்யப்படும் ஜிஹாத் (கிதால்) நம்மை நரகின் கொடிய வேதனைகளை அனுபவிக்கச் செய்துவிடும்.

எனவே, ஜிஹாத் (கிதால்) விஷயத்தில் அதற்கான நிபந்தனைகள், விதிமுறைகளை மிகச் சரியாக ஆய்வு செய்த பிறகே ஒரு முடிவுக்கு வர வேண்டும். அவை என்னென்ன என்பதைப் பார்க்கும் முன், ஜிஹாதைத் தவறாகப் புரிந்து கொண்டதால், இஸ்லாமிய வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ள கருப்பு அத்தியாங்களைப் பற்றி அடுத்த தொடரில் பார்ப்போம்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்.........

Post a Comment

0 Comments