தக்லீத் ஓர் ஆய்வு.(தொடர் 05)
நாம் ஸஹாபாக்களை திட்டுகிறோமா?






நபித் தோழர்களை பின்பற்றுவதும் வழிகேடுதான் என்ற தலைப்பில் குா்ஆன்,ஹதீஸைத் தவிர வேறு எதனையும் பின்பற்றக் கூடாது என்ற கருத்தில் திருமறைக் குா்ஆனில் இறைவன் குறிப்பிட்டுள்ள வசனங்களையும் அதற்குறிய விளக்கங்களையும் நாம் பார்தோம்.

ஸஹாபாக்களை பின்பற்றுவது வழிகேடு,நபித் தோழர்களானாலும் அவர்களை தக்லீத் செய்யக் கூடாது குா்ஆன்,மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் தான் பின்பற்ற வேண்டும் என்று நாம் பேசியும்இஎழுதியும் வரும் இவ்வேலை.

இப்படி நாம் சொல்வதால் ஸஹாபாக்களை மதிக்கவில்லை,அவா்களை நாம் திட்டுகிறோம் என்றெல்லாம் பிரச்சாரம் செய்து மக்கள் மத்தியில் தங்களுக்கான ஒரு ஆதரவைப் பெற்றுக் கொள்ள முனைகிறார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல.
நபித்தோழர்களை பின்பற்றக் கூடாது அவா்களின் வார்த்தைகள்,வாழ்க்கை வழி முறைகள் மார்க்கத்தின் ஆதாரமாகாது என்று நாம் கூறுவதினால் ஸஹாபாக்களை நாம் திட்டுகிறோம் என்றோ,அல்லது அவா்களின் தியாகத்தை குறைத்து மதிப்பிடுகிறோம் என்றோ அர்த்தமல்ல.

ஸஹாபாக்களை நாம் நேசிக்கிறோம்,அவா்களின் தியாகங்களை மெச்சுகின்றோம்,ஆனாலும் மார்க்க விஷயங்களில் குா்ஆன்,மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களை மாத்திரம் தான் நமது வழிமுறைகளாக ஏற்றுக் கொள்வோம்.

இந்த இரண்டுக்கும் மாற்றமாக யார் என்ன கருத்தை சொல்லியிருந்தாலும் அவற்றை தூக்கி தூர எறிந்து விடுவோம் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.

இனி ஸஹாபாக்கள் இந்த மார்க்கத்தின் வளர்சிக்காக செய்ய தியாகங்களை பற்றியும் அவா்களின் சேவைகள் பற்றியும் சுருக்கமாக பார்த்துவிட்டு,ஸஹாபாக்களை பின்பற்றக் கூடாது என்பதற்கான மேலதிக விளக்கங்களை ஆராய்வோம்.




நம்மை விட ஈமானில் சிறந்த நல்லவா்கள்.

மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பிறகு (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி)
நூல்: புகாரி 2651

என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த இரு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட அந்தத் தர்மம் எட்டாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)
நூல்: புகாரி 3673

நபித் தோழர்களைப் பற்றிய திருமறையின் புகழ்ச்சி.

உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். அவர்கள் பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட மகத்தான பதவியுடையவர்கள். (அல்குர்ஆன் 57:10)

ஹிஜ்ரத் செய்தோரிலும்அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும்நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.
(அல்குர்ஆன் 9:100)

இந்த நபியையும்ஹிஜ்ரத் செய்தோரையும்அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும்சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்இரக்கமுடையோன்.
(அல்குர்ஆன் 9:117)

மேற்கண்ட வசனங்களில் நபித் தோழர்களுக்குள்ள சிறப்புகளை இறைவன் அழகாக எடுத்துக் கூறியுள்ளான்.

இந்தச் சிறப்புகளை மறுத்து,நபித்தோழர்களை தவறாக விமர்சித்து அவா்களை நிந்திக்கும் ஷீயாக்களை எதிர்த்து அவா்களின் கருத்துக்களை மக்கள் மத்தியில் அடையாளம் காட்டி நாம் அடிக்கடி எழுதிவருவதையும் வாசகர்கள் அறிந்திருப்பீர்கள்.

அதே போல் இப்படியெல்லாம் சிறப்புகள் இருக்கிறது என்பதற்காக அவா்கள் சொல்வதும் மார்க்கத்தின் ஆதரங்களாகும் என்று வாதிடுவதும் வடி கட்டிய மடமைத் தனம் என்பதையும் நாம் மனதில் பதிந்து கொள்ள வேண்டும்.

அதற்கான காரணம் 

நபித்தோழர்களும் மனிதர்கள் தான்.

அவா்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.

நபித்தோழர்களும் சில நேரங்களில் தவறுகளை செய்திருக்கிறார்கள்.

சில நபித் தோழர்களின் கருத்துக்களும்,செயல்பாடுகளும் குா்ஆன்,ஹதீஸிற்கு மாற்றமாக அமைந்திருக்கிறது.

பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளன.

குர்ஆன்ஹதீஸில் இல்லாத சில விஷயங்களை அவர்களாக உருவாக்கினார்கள்.

என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. எனவே தான் குர்ஆனையும்நபிவழியையும் தவிர வேறு எதையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறோம்.

குர்ஆன்ஹதீசுக்கு மாற்றமாக ஒன்றல்லஇரண்டல்ல. பல்வேறு விஷயங்களில் ஸஹாபாக்கள் கருத்துக் கூறியுள்ளார்கள் என்பது தான் உண்மை நிலையாகும்.

ஸஹாபாக்கள் குா்ஆன்,மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களுக்கு மாற்றமாக கூறிய கருத்துக்கள் எவை அவை எப்படி குா்ஆன்,ஹதீஸிற்கு மாற்றமாக இருக்கிறது என்ற விஷயங்களை இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் பார்ப்போம்.

ஆய்வு தொடரும்...................

Post a Comment

0 Comments