பாதிக்கப்படும் மருமகளும், பாவியாகும் மாமியார்களும்.


கடந்த சில நாட்களுக்கு முன்பு மாமியார் பணிவிடையும், மருமகளுக்கு மார்க்கத்தின் அறிவுரையும். என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை நாம் வெளியிட்டிருந்தோம். குறிப்பிட்ட ஆக்கத்தில் மாமியாருடன் மருமகள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றிய செய்திகளை குர்ஆன் மற்றும் ஸஹீஹான ஹதீஸ்களின் அடிப்படையில் தெளிவுபடுத்தினோம்.

அந்த ஆக்கத்தைப் பார்த்த சில சகோதரிகள் மாமியார்களுடன் மருமகள் எப்படி நடக்க வேண்டும் என்பதைப் பற்றிய தகவலை எழுதியதைப் போல் மருமகளுடன் மாமியார்கள் எப்படி நடக்க வேண்டும்? என்ற செய்தியையும் கட்டுரையாக தரும்படி வேண்டியதின் அடிப்படையில் இந்த ஆக்கம் பிரசுரிக்கப்படுகிறது.
குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகளில் மிகவும் பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுவது மாமி, மருமகள் பிரச்சினைதான் இதற்குக் காரணம் என்னவெனில் மாமியார் எப்போதும் மருமகளை தனது கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்று ஆசைப்படுவாள்.

இதே நேரம் மருமகள் எப்போதும் கணவனை தனது கட்டுப்பாட்டில் வைக்க விரும்புவாள்.

நான் சொல்வதைக் தான் மருமகள் கேட்க வேண்டும் என்ற எண்ணம் மாமியாரிடமும், தான் கீறும் கோட்டை கணவன் தாண்டக் கூடாது என்ற எண்ணம் மணைவியிடம் மேலோங்கும் போது குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உருவாகிறது.

மாமி, மருமகள் இருவருக்கும் மத்தியில் இந்தப் பிரச்சினை நடந்தாலும் மருமகளைப் பொருத்தவரை முடிந்தவரை மாமியார் விஷயத்தில் சில விட்டுக் கொடுப்புக்களை செய்யத்தான் செய்கிறாள். ஆனால் மாமியார்கள் மருமகள்களின் அளவுக்கு விட்டுக்கொடுப்பு செய்வதாக அறிய முடியவில்லை.

“மருமகளின் கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம்” என்ற அடிப்படையில் மருமகள் ஒரு தவறு செய்ய மாட்டாளா என்று கழுகுப் பார்வைப் பார்க்கும் மாமியார்கள் நிறையவே இருக்கிறார்கள்.

மருமகளின் சமையலில் குறை பிடிப்பதில் தொடங்கி மருமகள் வைக்கும் வெண்ணீரில் கூட தவறு பிடிப்பார்கள் இந்த மாமியார்கள்.

துவைப்பது பிழை, சமைப்பது பிழை, வீடு சுத்தம் செய்வதில் பிழை, தனக்குச் செய்ய வேண்டிய காரியங்களை செய்வதில் பிழை என்று அவர்கள் குறை சொல்லாத செயல்பாடுகள் மீதம் இல்லை என்ற அளவுக்கு மாமியார் கொடுமைகள் தாங்க முடியாமல் தள்ளாடும் பெண் சகோதரிகள் நிறைந்தே இருக்கிறார்கள்.

மருமகள் செய்யும் காரியங்களை பிழை காண வேண்டுமென்பெதே இதற்கான காரணம்.

இந்த கழுகுப் பார்வையின் விபரீதம் தான் அன்றாட நாளிதழ்களில் நாம் பார்க்கும் சம்பவங்கள்.

வீட்டில் இருந்த ஸ்டவ் வெடித்து இளம் பெண் மரணம்.

மாடியில் இருந்து தவறி விழுந்த மருமகள் மரணம்.

தவறுதலாக நடந்த தீ விபத்தில் திருமணமாகி மூன்று மாதங்களே ஆன மருமகள் கருகி உயிரிழப்பு.

மாப்பிள்ளை வீட்டாருடன் சுற்றுலா சென்ற மருமகள் மலையிலிருந்து தவறி விழுந்து மரணம்.

இது போன்ற பல தலைப்புக்களில் நாளும் குறைந்தது ஒரு மரணச் செய்தியாவது நம் கண்ணில் படாமல் இருப்பதில்லை. இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள நாடுகளில் இது சகஜமான ஒன்றாக மாறியிருப்பது மிகவும் கவலைக்குறிய செய்தியாகும்.

காரணம் என்ன?

மருமகளை எப்படியாவது பலிவாங்க வேண்டும், நான் நில் என்றால் அவள் நிற்க வேண்டும், நான் போ என்றால் அவள் போக வேண்டும். இந்த எண்ணம் எந்த மாமியாருக்காவது இருந்தால் அவர் ஒரு சிறந்த மாமியாராக இருக்க முடியாது.

இதே நேரம் இதே எண்ணத்தில் மருமகள் இருந்தால் அவளும் ஒரு சிறந்த மருமகளாக இருக்க முடியாது. ஆனால் பெரும்பாலான இடங்களில்  மருமகளை விட மாமியார் தான் இந்த எண்ணம் மிகைத்தவராக இருக்கிறார்.

மருமகள் மரணம் பற்றிய செய்திகள் வரும் அளவுக்கு, மாமியாரின் மரணம் பற்றிய செய்திகள் வராததை வைத்தே இதனை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

கற்பமாகும் மருமகளும், சந்தர்ப்பவாதியாகும் மாமியாரும்.

மருமகளை மகளாகப் பார்க்க வேண்டிய எத்தனையோ மாமியார்கள் அவளை ஒரு எதிரியாகத் தான் பார்க்கிறார்கள். அதிலும் மருமகளின் கர்ப்ப காலம் என்பது மிக முக்கியமான ஒரு கால கட்டமாகும். பாசத்திற்காக அவள் ஏங்கும் சந்தர்ப்பம், தனது காரியங்களை தானே செய்ய முடியாமல் தள்ளாடும் சந்தர்ப்பம் இந்த நேரத்தில் ஒரு மாமியார் தாயாரைப் போல் மருமகளுடன் நடக்க வேண்டும் என்றுதான் எந்த மருமகளும் ஆசைப்படுவாள் ஆனால் பெரும்பாலான மாமியார்கள் அப்படி நடப்பது கிடையாது.

மருமகள் கற்பமாகிவிட்டால் எப்படியாவது அவளின் வீட்டுக்கு அவளை அனுப்பிவிட வேண்டும் என்ற எண்ணம் தான் பெரும்பாலான மாமியார்களின் உள்ளத்தில் குடிகொள்கிறதே தவிர அவளை தனது வீட்டில் வைத்து தனது பிள்ளையைப் போல் பார்ப்பதற்குறிய எண்ணம் பலருக்கு ஏற்படுவதே இல்லை.

ஒரு பெண்மணி தாயின் வீட்டில் இருந்தால் மிகச் சிறப்பாக கவணிக்கப்படுவாள் என்பதால் கணவன் அவளை அங்கு அனுப்பி அவளுக்குறிய செலவினங்களை பார்ப்பதென்பது மார்க்கம் அனுமதித்த ஒரு காரியம் தான், ஆனால் நான் என் மருமகளை என் மகளைப் போல் பார்ப்பேன் என்று மருமகள் மீது பாசத்தைக் காட்டுவதற்கு எத்தனை மாமியார்கள் தயார்?

கர்பமாக இருக்கும் பெண்ணைக் கூட சந்தர்ப்பம் பார்த்து பலிவாங்கும் மாமியாரின் செய்திகளை நாம் நிறையவே பார்க்கக் கிடைக்கிறது.

அவளுக்கு தான் சமைத்துக் கொடுக்க வேண்டிய நேரத்தில், தனக்கு அதற்குறிய சக்தி இருந்தும், உடல் பலம் இருந்தும் அவளைக் கஷ்டப்படுத்தி அவளிடம் வேலை வாங்கும் வக்கிர புத்தியை என்னவென்பது?

மாமியாருக்கு மருமகள் பணிவிடை செய்வது கட்டாயமா?

மருமகள் தனது மாமியாருக்கு பனிவிடை செய்வது என்பது மார்க்கத்தில் கட்டாயப்படுத்தப்பட்ட ஒரு காரியம் கிடையாது. ஆனால் ஒரு ஆண் திருமணம் செய்யும் போது தனது மனைவி தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்பதை தனது எண்ணத்தில் வைத்தே திருமணம் முடிக்கிறான்.

ஆனால் தனது குடும்பத்தினருக்கு தனது மனைவி கண்டிப்பா பனிவிடை செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவதற்கு மார்க்கத்தில் எங்கும் அனுமதியில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடத்தில் ஜாபிரே உனக்கு மனைவி உண்டாஎன்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். ஏற்கனவே திருமணமானவளை மனந்தாயா அல்லது கண்ணிப்பெண்னை மனந்தாயாஎன்று கேட்டார்கள். அதற்கு நான் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டவளைத் தான் மனந்தேன் என்று கூறினேன். நீ சிறிய (இளம்) பெண்னை திருமணம் செய்திருக்கக்கூடாதாஎன்று கேட்டார்கள். நான் உங்களுடன் (போருக்கு சென்றிருந்த போது) என் தந்தை இன்னாளில் கொல்லப்பட்டுவிட்டார். அவர் (என் சகோதரிகளான) பல இளம் பெண்களை விட்டுச் சென்றுள்ளார். அவர்களைப் போன்ற ஒரு இளம் பெண்னையே (என் மனைவியாக ஆக்கி) அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் விரும்பவில்லை. 

எனவே (என் சகோதரிகளான) அந்த இளம்பெண்களுக்கு பேண் பார்த்துவிடவும் அவர்களின் சட்டை கிழிந்துவிட்டால் அதைத் தைத்துக்கொடுக்கவும் (பக்குவம் பெற்ற) ஏற்கனவே திருமணமான பெண்னை நான் திருமணம் செய்துகொண்டேன் என்று கூறினேன். நீ நினைப்பது சரிதான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)நூல் : அஹ்மத் (14332)

மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள், ஜாபிர் (ரலி) அவர்கள் திருமணம் செய்ததை பற்றி விசாரிக்கிறார்கள். மணைவி விதவையா? அல்லது கண்ணிப் பெண்ணா? என்று விசாரித்துவிட்டு, கண்ணிப் பெண்ணை திருமணம் செய்திருக்களாமே என்று கேட்கிறார்கள்.

அதற்கு பதில் சொன்ன ஜாபிர் (ரலி) அவர்கள் தனது சகோதரிகளுக்கு உதவியாக தனது மனைவி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் திருமணம் செய்ததாக குறிப்பிடுகிறார்கள். அதற்கு நபியவர்கள் நீ நினைப்பது சரிதான் என்று பதில் சொன்னார்கள்.

ஆனால் நீ அப்படித் தான் செய்திருக்க வேண்டும் என்று கட்டளையிடவில்லை. ஒருவர் தனது மனைவி தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் உதவியாக இருக்க வேண்டும் என்று நினைக்களாம். ஆனால் கட்டளையிட முடியாது.

மனைவி விரும்பி பனிவிடை செய்வது என்பது அவளுக்கு நிறைய நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடியது. இதே நேரத்தில் யாராவது அவள் பனிவிடை செய்யாவிட்டால் அது மார்க்க அடிப்படையில் தவரானதும் அல்ல.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு பெண்மணி தன்னுடைய கணவனின் வீட்டிற்கும்அவன் குழந்தைகளுக்கும் பொருப்பாளி ஆவாள். அவைகளைப் பற்றி (மறுமையில்) அவள் விசாரிக்கப்படுவாள். (நூல் : புகாரி - 2554)  

மருமகள் யாருக்கு பனிவிடை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி மேற்கண்ட ஹதீஸ் தெளிவாக உணர்த்துகிறது. அந்தச் செய்தியில் கணவனி தாய்க்கோ அல்லது தந்தைக்கோ பனிவிடை செய்ய வேண்டும் என்று எந்தத் தகவலும் குறிப்பிடப்படவில்லை.

அனுமதிக்கப்பட்ட ஒரு காரியத்தை கட்டாயப்படுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது என்பதால் மாமியாருக்கு மருமகள் பனிவிடை செய்வது என்பது அனுமதிக்கப்பட்ட காரியம் தானே தவிர கட்டாயமானது இல்லை என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பாதிக்கப்படுபவளின் துஆவுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்.

நபி(ஸல்)அவர்கள் ஒரு முறை முஆத்(ரலி)அவர்களை யமனுக்கு ஸகாத் வசூலிப்பதற்காக அனுப்பி வைத்தார்கள்.அப்போது முஆத்(ரலி)அவர்களிடம் பாதிக்கப் பட்டவனின் துஆவுக்கு அஞ்சிக் கொள் அவனுடைய துஆவுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் கிடையாது என்று கூறினார்கள்.(புகாரி : 1401)

அதாவது ஒரு மனிதன் இன்னொருவனுக்கு ஏதாவது அநியாயம் செய்து விட்டால் அந்த அநியாயத்திற்கு சம்பந்தப் பட்டவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் அவர்கள் மன்னித்தால் அல்லாஹ்வும் மன்னித்து விடுவான்.

பாதிக்கப்பட்டவன் மன்னிக்காவிடில் அல்லாஹ்வும் மன்னிக்க மாட்டான் என்பது இஸ்லாமிய அடிப்படை. பாதிக்கப் பட்டவன் காபிராக இருந்தாலும் சரியே!

பாதிக்கப்பட்டவன் எப்படி அல்லாஹ்விடம் கேட்கிறானோ அப்படியே அல்லாஹ்வும் அதனை ஏற்றுக் கொள்வான்.

மருமகள் விஷயத்தில் அவர்களை கஷ்டப்படுத்தி, துன்பத்திற்குள்ளாக்கும் மாமியார்கள் படிப்பினை பெற வேண்டிய ஒரு சம்பவத்தைப் பாருங்கள்.

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (கூஃபாவின் ஆளுநர்) சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களைப் பற்றி கூஃபா வாசிகள் (சிலர்) உமர் (ரலி) அவர்கலிடம் முறையிட்டனர். எனவே (அது குறித்து தீர விசாரித்து) உமர் (ரலி) அவர்கள் சஅத் (ரலி) அவர்களை (பதவியிலிருந்து) நீக்கிவிட்டு அம்மார் (ரலி) அவர்களை அவர்களுக்கு அதிகாரியாக நியமித்தார்கள். சஅத் (ரலி) அவர்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்பதும் அவர்களின் முறையீடுகலில் ஒன்றாக இருந்தது. ஆகவேஉமர் (ரலி) அவர்கள் சஅத் (ரலி) அவர்கüடம் ஆளனுப்பி அவர்களை வரவழைத்து''அபூஇஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று இவர்கள் கூறுகின்றனரே (அது உண்மையா?)''என்று கேட்டார்கள். அதற்கு அபூஇஸ்ஹாக் (சஅத் பின் அபீவக்காஸ்(ரலி) அவர்கள்''அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே நான் அவர்களுக்குத் தொழுவித்துவந்தேன்அவர்கள் தொழுது காட்டியதைவிட நான் குறைத்துவிடவில்லை. நான் இஷாத் தொழுகை தொழுவிக்கும்போது முதல் இரண்டு ரக்அத்கலில் நீளமாக ஓதியும் பின் இரண்டு ரக்அத்கüல் சுருக்கமாக ஓதியும் தொழுவிக்கிறேன்'' என்று பதிலலித்தார்கள். 

அதற்கு உமர் (ரலி) அவர்கள், ''உங்களைப் பற்றி (நமது) எண்ணமும் அதுவேஎன்று கூறினார்கள். இதையொட்டி உமர் (ரலி) அவர்கள்'ஒருவரைஅல்லது 'சிலரைசஅத் (ரலி) அவர்களுடன் கூஃபாவுக்கு அனுப்பிவைத்துசஅத் (ரலி) அவர்கள் குறித்து கூஃபாவாசிகலிடம் விசாரனை நடத்தினார்கள். விசாரிக்கச் சென்றவர் கூஃபாவாசிகலிடம் விசாரனை மேற்கொண்டார். (கூஃபாவிலிருந்த) ஒரு பள்லி வாசல் விடுபடாமல் எல்லாவற்றிலும் அவரைப் பற்றி விசாரித்தார். அனைவரும் சஅத் (ரலி) அவர்களை மெச்சி நல்லவிதமாகவே கூறினர். இறுதியில் (பிரபல கைஸ் குலத்தின் பிரிவான) பனூ அப்ஸ் குலத்தாரிடம் அவர் விசாரித்தபோது அந்தக் குலத்தைச் சேர்ந்த அபூசஅதா எனும் குறிப்புப் பெயர் கொண்ட உசாமா பின் கத்தாதா என்பவர் எழுந்துஎங்களிடம் நீங்கள் வேண்டிக் கொண்டதன் பேரில் நான் (எனது கருத்தைக்) கூறுகிறேன்: 

சஅத் அவர்கள் (தாம் அனுப்பும்) படைப் பிரிவுடன் தாம் செல்லமாட்டார். (பொருட்களை) சமமாகப் பங்கிட மாட்டார். தீர்ப்பு அüக்கும்போது நீதியுடன் நடக்கமாட்டார்'' என்று (குறை) கூறினார்.

இதைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள்''அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீது சத்தியமாக! மூன்று பிரார்த்தனைகள் நான் செய்யப்போகிறேன்'' என்று கூறிவிட்டு


                           اللَّهُمَّ إِنْ كَانَ عَبْدُكَ هَذَا كَاذِبًا قَامَ رِيَاءً وَسُمْعَةً فَأَطِلْ عُمْرَهُ وَأَطِلْ فَقْرَهُ وَعَرِّضْهُ بِالْفِتَن

இறைவா! உன்னுடைய இந்த அடியார் (என்னைப் பற்றிக் கூறிய அவருடைய குற்றச்சாட்டில்) பொய் சொல்லியிருந்தால் பகட்டுக்காகவும் புகழுக்காகவும் அவர் இவ்வாறு குறை கூற முன்வந்திருந்தால்.......
அவருடைய வாழ் நாளை நீட்டி (அவரைத் தள்ளாமையில் வாட்டி) விடுவாயாக! அவரது ஏழ்மையையும் நீட்டுவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!'' என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

இதன் அறிவிப்பாளரான அப்துல் மலிக் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: 
பின்னர் (சஅத் அவர்கள் மீது பொய்யான குற்றச் சாட்டுக்களைச் சொன்ன அந்த மனிதர் பல சோதனை களுக்கு உள்ளானார்.) அவரிடம் (நலம்) விசாரிக்கப்பட்டால்நான் சோதனைக்குள்ளான முதுபெரும் வயோதிகனாக இருக்கிறேன்சஅத் அவர்கலின் பிரார்த்தனை என்னைப் பீடித்துவிட்டது'' என்று கூறுவார்.
அப்துல் மலிக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:
பின்னா(லி)ல் அவரை நான் பார்த்திருக்கிறேன். முதுமையினால் அவரது புருவங்கள் அவரது கண்கள் மீது விழுந்துவிட்டிருந்தன. அவர் சாலைகüல் செல்லும் அடிமைப் பெண்களை கிள்லி அவர்களைத் துன்புறுத்துவார்  (புகாரி : 755)

ஸஅத்(ரலி)அவர்;கள் மீது பொய்யான ஒரு குற்றச்சாட்டை உஸாமா பின் கதாதா என்பவர் சொல்கிறார்.

ஸஅத்(ரலி)அவர்கள் அவருக்கெதிராக மூன்று விஷயங்களில் அல்லாஹ்விடம் பிரார்திக்கிறார்கள்.

1.அவருடைய வாழ்நாளை நீட்டிக் கொடுக்க வேண்டும்.

2.அவரை பரம ஏழையாக்கிவிட வேண்டும்.

3.அவரை குழப்பத்தில் விட்டு விட வேண்டும்.

இந்த மூன்று துஆக்களையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.

அதனால் தான் பிற்காலத்தில் உஸாமா பின் கதாதா ஸஅத் அவர்கள் செய்த துஆ என்னைப் பிடித்து விட்டது என்று சொல்கிறார்.

அநியாயமாக மருமகள்களை துன்புறுத்தும் மாமியார், அல்லது மாமியாரைத் துன்பத்திற்குள்ளாக்கும் மருமகள் அனைவரும் பாதிக்கப்படுபவரின் துஆவுக்கு அஞ்சிக்கொள்ள கடமைப்பட்டுள்ளார்கள்.

கண்ணியமிக்க மாமியார்களே! மருமகள்களின் துஆவுக்கு அஞ்சிக்கொள்ளுங்கள். அவர்கள் உங்களுக்கு எதிராக துஆ கேட்பதற்கு முன்பு நீங்கள் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுங்கள். இல்லாவிடில் அவர்களின் துஆவின் காரணமாக அல்லாஹ் உங்கள் பிடித்துக் கொள்வான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Post a Comment

0 Comments