ஜிஹாத் - ஓர் ஆய்வு. (தொடர் - 12, 13)


அன்னையாரின் சபதமும், ஐயாயிரம் முஸ்லிம்களின் படுகொலையும்.
(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். Rasmin M.I.Sc )

அலீ (ரலி) அவர்கள் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் நான்காவது கலீஃபாவாக பொறுப்பேற்ற போது மிகவும் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது.  அவர்கள் மிகப் பெரிய அளவில் எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.  பெருமானாரின் மனைவிமார்களான உம்முல் முஃமினீன்களிடமிருந்தும், பல மூத்த நபித்தோழர்களிடமிருந்தும் எதிர்ப்புகளையும் கண்டனக் கனைகளையும் சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.  இவை அனைத்திற்கும் காரணம் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை தான்.

உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கெதிரான கிளர்ச்சியும் அவர்களின் படுகொலையும் எப்படி ஜிஹாத் என்ற பெயரில் நடத்தப்பட்டதோ, அதே வழிமுறையில் தான் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்குப் பழி தீர்ப்பதற்காகவும் ஜிஹாத் என்ற ஆயுதம் கையிலெடுக்கப் பட்டது.

ஒருவகையில் பார்த்தால் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையில் ஈடுபட்டவர்களில் பெயர் சொல்லும்படி விளங்கிய முக்கியமான நபித்தோழர்கள் யாரும் கிடையாது.  சாதாரண நிலையில் உள்ளவர்கள் தான் ஜிஹாத் என்ற பெயரில் உஸ்மான் (ரலி)க்கு எதிராகப் படை திரட்டி வந்தார்கள்.  பின்னர் கொலையும் செய்தார்கள்.

ஆனால் எதிர் நடவடிக்கையாக பழி தீர்க்கத் துடித்தவர்கள் அந்த வகையினர் அல்ல!  பெருமானாரின் மனைவிமார்கள், தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி), முஆவியா (ரலி) போன்ற மிக முக்கியமானவர்கள் முன்னணியில் இருந்தனர்.  இவர்கள் தான் ஜிஹாத் என்ற அஸ்திரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு உஸ்மான் (ரலி) கொலைக்குப் பழி தீர்க்கிறோம் என்ற பெயரில் இஸ்லாமிய ஆட்சித் தலைவராக விளங்கிய அலீ (ரலி) அவர்களுக்கு எதிராகக் களம் இறங்கினார்கள்.

அலீ (ரலி) அவர்களுக்கு எதிராக யார் யாரெல்லாம் எவ்வாறு படை திரட்டிக் கொண்டு களமிறங்கினார்கள்? அதன் விளைவுகள் எவ்வளவு மோசமாக இருந்தன? யார் யார் பக்கம் என்னென்ன தவறுகள் இருந்தன? என்ற விபரங்களைத் தெரிந்து கொள்ள வரலாற்றுக் குறிப்புகளுக்குள் செல்வோம்.

சிரியாவில் உஸ்மான் (ரலி) கொலைக்குப் பழிதீர்க்க வெறியூட்டப்படுதல்.

உஸ்மான் (ரலி) அவர்கள் கொலை செய்யப்படும் போது, அவர்களின் மனைவியரில் ஒருவரான நாயிலா (ரலி) அவர்கள் தடுக்க முற்பட்டபோது, கிளர்ச்சியாளர்கள் அவர்களின் உள்ளங்கையோடு சேர்த்து நான்கு விரல்களை வெட்டிவிடுகிறார்கள். வெட்டப்பட்ட நாயிலா (ரலி) அவர்களின் விரல்களையும் உஸ்மான் (ரலி) அவர்கள் ஷஹீதாக்கப்படும்போது அணிந்திருந்த ரத்தம் தோய்ந்த சட்டையையும், அலீ (ரலி) அவர்களுக்கு பைஅத் செய்ய மறுத்த நுஃமான் பின் பஸீர் (ரலி) எடுத்துக் கொண்டு சிரியாவுக்குச் சென்று முஆவியா(ரலி) விடம் ஒப்படைத்தார்.

அவற்றை மக்களின் பார்வைக்காக பள்ளிவாசல் மிம்பரில் வைத்து, உஸ்மான் (ரலி) கொலைக்குப் பழி தீர்த்தே தீர வேண்டும் முஆவியா (ரலி) பிரசங்கம் நிகழ்த்துகிறார். சஹாபாக்களில் உபாதா பின் ஸாமித், அபுத்தர்தா, அபு உமாமா, அம்ர் பின் அன்பதா (ரலி-அன்ஹும்) உள்ளிட்ட பலரும் இந்த உரைக்கு தூபமிட்டார்கள்.

மக்களெல்லாம் மிம்பரைச் சுற்றி கட்டிப் பிடித்துக் கொண்டு அழுகிறார்கள். ஒரு கட்டத்தில் ஆயிரக் கணக்கான சிரியாவாசிகள் "உஸ்மானைக் கொன்றவர்களைக் கணக்குத் தீர்க்காமல் இல்லற வாழ்வில் ஈடுபடுவதில்லை'' என்று சபதமேற்கிறார்கள். இது ஒருபுறமிருக்க...

நபித்தோழர்களின் நிர்பந்தம்.

மற்றொரு புறம் மதீனாவில் தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி) உள்ளிட்ட சில நபித்தோழர்கள் உஸ்மான் (ரலி) கொலையாளிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், உடனே அவர்களுக்கான தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று ஆட்சித் தலைவரான அலீ (ரலி) அவர்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர்.

அலீ (ரலி) அவர்கள், "நீங்கள் வைக்கும் கோரிக்கையின் நியாயத்தை நான் நன்றாக உணர்வேன். ஆனால் அதற்குரிய தருணம் இதுவல்ல! குற்றவாளிகள் நம்மை விட அதிக வலிமையுடன் மதீனாவில் உள்ளனர்.  நிலைமை சற்று நமக்கு சாதகமாக அமைந்தவுடன் நாம் நடவடிக்கையில் இறங்குவோம்'' என்று பதிலளிக்கின்றார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் சபதம்.

உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி நடைபெற்று அவர்கள் கொல்லப்பட்ட சமயத்தில், நபி (ஸல்) அவர்களின் மனைவிகள் அனைவரும் ஹஜ் செய்வதற்காக மக்காவுக்குச் சென்றிருந்தார்கள்.  மதீனாவில் ஏற்பட்டிருந்த குழப்பங்களை அறிந்து, அவர்கள் மதீனா திரும்புவதற்கு உகந்த நேரம் இதுவல்ல என்று கருதி, மக்காவிலேயே தங்கி விடுகின்றார்கள்.

உஸ்மான் (ரலி) கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் அலீ (ரலி) அவர்களின் பக்கம் இருப்பதாகவும், அலீ (ரலி) அவர்கள் அந்தக் கொலையாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாகவும் அவர்கள் அனைவரும் நம்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி) ஆகிய இருவரும் மக்காவுக்குச் சென்று, அங்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்து இப்பிரச்சனை பற்றி ஆலோசனை செய்கின்றார்கள்.  ஆலோசனையின் முடிவில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள்,

"புனிதமான (துல்ஹஜ்) மாதத்தில், புனிதமான நகரத்தில், அல்லாஹ்வின் தூதருக்கு (அதாவது மஸ்ஜிதுந்நபவீக்கு) அருகில் உஸ்மான் (ரலி) கொல்லப்பட்டிருக்கிறார். இதற்குக் கணக்குத் தீர்த்தே ஆக வேண்டும்'' என்று சபதமேற்கின்றார்கள்.

யமன் மாகாண ஆளுநராக உஸ்மான் (ரலி) அவர்களால் நியமிக்கப்பட்ட யஃலா பின் உமைய்யா 600 ஒட்டகப் படையுடனும் ஆறு லட்சம் திர்ஹம் போர் நிதியுடனும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து சேருகின்றார். உமர் (ரலி) அவர்களின் மகனார் இப்னு உமர் (ரலி) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களின் பக்கம் சேர்ந்தார்கள்.

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் படையுடன் புறப்படத் தயாரானார்கள்.  அச்சமயத்தில் மக்களிடம் மூன்று விதமான அபிப்ராயங்கள் தோன்றின.

1. மக்காவிலிருந்து புறப்பட்டு நேராக சிரியாவுக்குச் சென்று அங்கு முஆவியா (ரலி) அவர்களுடன் சேர்ந்து கொண்டு மதீனாவுக்குப் படையெடுப்பது.

2. மக்காவிலிருந்து நேராக மதீனாவுக்குச் சென்று, அங்கு அலீ (ரலி) அவர்களை நேரில் சந்தித்து, கொலையாளிகளை ஒப்படைக்கும்படி கோருவது.

3. நேராக பஸராவுக்குச் செல்வது. பஸராவிலும் கூஃபாவிலும் தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி) ஆகியோரின் ஆதரவாளர்கள் கணிசமான அளவில் இருப்பதால் அங்கு சென்று படை பலத்தை அதிகரித்துக் கொண்டு பஸராவிலுள்ள உஸ்மான் (ரலி) அவர்களின் எதிரிகளைக் காலி செய்து விட்டு, அங்கிருந்து பெரும் படையுடன் மதீனாவுக்குச் சென்று பழிவாங்குவது.

இந்த மூன்று அபிப்ராயங்களில் மூன்றாவது அபிப்ராயமே பெரும்பாலோரின் கருத்தாக இருந்ததால், அதையே ஆயிஷா (ரலி) அவர்கள் முடிவாக அறிவிக்கின்றார்கள்.

ஆனால் இந்த முடிவில் பெருமானாரின் மனைவிமார்களில் ஹஃப்ஸா (ரலி) தவிர வேறு யாருக்கும் உடன்பாடில்லை. உஸ்மான் (ரலி) கொலையாளிகளுக்கு எதிரான போராட்டத்தை அவர்கள் ஆதரித்தார்கள்.  நேராக மதீனாவுக்குச் சென்று அலீ (ரலி) அவர்களிடம் முறையிட வேண்டும் என்ற இரண்டாவது கருத்து ஏற்கப்படுவதாக இருந்தால் தங்களுக்குச் சம்மதம் என்றும் வேறு எங்கும் செல்வதாக இருந்தால் தாங்கள் தயாரில்லை என்றும் தெரிவித்து விட்டார்கள்.

900 குதிரைப் படையுடன் ஆயிஷா (ரலி) அவர்கள் தலைமையில் பஸராவை நோக்கி பழிவாங்கும் படை புறப்படுகின்றது.  அந்தப் படையில் தான் கலகத்திற்குக் காரணமான பனூ உமைய்யா கோத்திரத்தைச் சார்ந்த மர்வான் பின் ஹகம், ஸயீத் இப்னுல் ஆஸ் ஆகிய இருவரும் இருந்தனர்.

ஆயிஷா (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து புறப்பட்ட பெருமானாரின் மற்ற மனைவிமார்கள் அனைவரும் மதீனாவாசிகளுக்கான இஹ்ராம் எல்லையான தாது இர்க் என்ற இடம் வந்ததும், தங்களின் பாதையை மதீனாவை நோக்கி தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.  ஆயிஷா (ரலி) அவர்களின் படை பஸராவை நோக்கிச் செல்கின்றது.

ஜிஹாதின் பெயரால் ஐயாயிரம் முஸ்லிம்கள் படுகொலை.

ஆயிஷா (ரலி) படைக்குள் சதிகாரர்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்குப் பழி தீர்ப்பதாகக் கூறி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தலைமையில் 900 குதிரைப் படையுடன் மக்காவிலிருந்து புறப்பட்ட படை, பஸரா செல்லும் வழியில் கூஃபா உள்ளிட்ட பல பகுதிகளிலும் மேலும் படையைத் திரட்டிக் கொண்டு, கணிசமான வலிமையுடன் பஸராவை நோக்கிச் செல்கிறது.

இந்நிலையில், "மர்ருழ் ழஹ்ரான்' என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட ஃபாத்திமா பள்ளத்தாக்கை அடைந்ததும், ஆயிஷா நாயகியின் படையில் சேர்ந்து கொண்டு வந்த சயீத் இப்னுல் ஆஸ், தனது ஆதரவாளர்களிடம், "நீங்கள் உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையாளிகளைப் பழி தீர்க்க விரும்பினால் இந்தப் படையில் உள்ள, தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி) ஆகியோர் உட்பட உஸ்மான் (ரலி) ஆட்சியைக் குறை கூறியவர்கள், விமர்சனம் செய்தவர்கள், மதீனாவில் இருந்து கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களைக் காப்பாற்ற முன் வராதவர்கள் போன்றவர்களும் குற்றவாளிகளே! எனவே இந்தப் படையில் உள்ள இந்த வகையினரைக் கொன்று விடுங்கள்'' என்று கூறினார்.

இதைக் கேட்ட மர்வான், "அப்படிச் செய்ய வேண்டாம். தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி), அலீ (ரலி) ஆகிய மூவரையும் ஒருவரையொருவர் மோத வைப்போம்.  இதில் யார் தோல்வியடைகின்றார்களோ அவர்களின் கதை முடிந்து விடும்.  

அப்போது அவர்களை நாம் எளிதில் வீழ்த்தி விடலாம்'' என்று மிகப் பெரிய கிரிமினல் ஐடியாவைக் கூறினார்.

கட்டுச் சோற்றுக்குள் பெருச்சாளியை வைத்த கதையாக, சதிகாரர்களை உள்ளடக்கிய நிலையில் ஆயிஷா (ரலி) அவர்களின் படை பஸராவை வந்தடைந்து, ஒரு மேட்டுப் பகுதியில் பாளையம் இறங்கியது.

பஸராவைக் கைப்பற்றுதல்.

உஸ்மான் (ரலி) கொலைக்குப் பல்வேறு வகையில் காரணமானவர்கள் பஸராவில் ஓரளவு பலத்துடன் இருந்ததால் முதலில் அவர்களைப் பழி தீர்க்கத் தேவையான யுக்திகளை தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி), ஆயிஷா (ரலி) ஆகியோர் வகுத்தனர்.

இதற்கிடையில் இந்த மோதலைத் தவிர்ப்பதற்காக பஸராவில் இருந்த பல முக்கியப் பிரமுகர்கள் எவ்வளவோ முயற்சி செய்தார்கள்.

ஹாரிஸா பின் ஹுதாமா என்பவர், "உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையாளிகளைப் பழி தீர்க்க வேண்டும், அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்பதை விட, உம்முல் முஃமினீனாகிய நீங்கள் வீட்டை விட்டுப் புறப்பட்டு, முஃமின்களில் ஒரு சாராரை எதிர்த்துப் படை திரட்டி வந்தது மிகப் பெரிய விஷயம். எனவே மோதலைத் தவிர்த்து விடுங்கள்'' என்று அறிவுரை கூறினார்.

இது போல் பல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனாலும் பலனில்லை. தம் படையினரிடத்தில் தல்ஹா, ஜுபைர், ஆயிஷா (ரலி) ஆகியோர் வீர உரை நிகழ்த்தி பஸரா மீது தாக்குதல் தொடுக்கப்படுகின்றது. இரு தரப்பிலும் பெரும் உயிர்ச் சேதம் ஏற்படுகின்றது.  ஆயிஷா (ரலி) அவர்களின் படைக்கு ஆதரவு தர மறுத்தவர்களும் தாக்கப்படுகின்றார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் கொலையாளிகளில் முக்கியமானவனான ஹக்கீம் பின் ஜபலா என்பவன் தலைமையில் ஓரளவு படை பலம் இருந்தது.  அவன் ஆயுதம் தாங்கிய 300 பேர் கொண்ட படையுடன் திடீர் தாக்குதல் நடத்தினான். ஆயிஷா (ரலி) அவர்களின் படையினர் திருப்பித் தாக்குதல் நடத்தி அவர்களில் 70 பேர் கொல்லப்பட்டு விடுகின்றார்கள்.  இத்தாக்குதலில் ஹக்கீம் பில் ஜபலாவும் கொல்லப்படுகின்றான்.

ஜுபைர் மற்றும் தல்ஹா (ரலி)யின் படையினர் இரவோடு இரவாகப் புகுந்து ஒரே தாக்குதலில் 40 பேரைக் காலி செய்து விடுகின்றார்கள்.  ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆதரவு தர மறுத்த பஸராவின் முக்கியப் பிரமுகர் உஸ்மான் பின் ஹனீப் என்பவர் தூக்கி வரப்பட்டு தாக்கப்படுகின்றார்.  அவரது தாடி ரோமங்கள் பிடுங்கப்படுகின்றது. அவர் உயிர் பிழைத்தால் போதும் என்று நினைத்து பஸராவை விட்டு ஓடுகின்றார்.

இரு தரப்பிலும் பெரிய இழப்பிற்குப் பின் ஆயிஷா (ரலி) அவர்களின் படை பஸரா நிர்வாகத்தையே கைப்பற்றி விடுகின்றது.  பஸரா மாகாண நிதியமைச்சராக, பைத்துல் மால் பொறுப்பாளராக அபூபக்ர் (ரலி)யின் மகனும், ஆயிஷா (ரலி)யின் சகோதரருமான அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் (ரலி) நியமிக்கப்படுகின்றார்.பைத்துல்மால் பொருட்கள் மக்களுக்கு வாரி வழங்கப்படுகின்றன.

அலீ (ரலி) அவர்களின் ஆட்சியின் கீழ் இருந்த பஸராவை ஆயிஷா (ரலி), தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி) ஆகியோரின் படையினர் கைப்பற்றிய செய்தியை அறிந்த முஆவியா (ரலி) அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்புகின்றார்கள்.

மதீனாவுக்குப் படையெடுக்க ஆயத்தம்.

பஸராவைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அவர்களின் அடுத்த இலக்கான மதீனாவின் மீது குறி வைக்கின்றார்கள்.  பஸராவிலிருந்து மதீனா செல்லும் வழியில் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள முஸ்லிம்களின் ஆதரவை அல்லது எதிர்க்காத நிலையை ஏற்படுத்திக் கொள்வதற்காக ஆயிஷா (ரலி) கடிதம் எழுதுகின்றார்கள்.

அவ்வாறு அப்துல் கைஸ் கூட்டத்தினரின் தலைவராக விளங்கிய ஜைத் பின் ஸவ்ஹான் என்பவருக்கு, தங்களுக்கு உதவி செய்யுமாறும் அல்லது நடுநிலையை மேற்கொள்ளுமாறும் கடிதம் அனுப்புகின்றார்கள்.

அதற்குப் பதில் எழுதிய ஜைத், "உம்முல் முஃமினீன் அவர்களுக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக! தங்களை நாங்கள் மதிக்கிறோம். அதே சமயம் தாங்கள் வீட்டில் இல்லாமல் அல்லாஹ்வின் கட்டளையை மீறி போருக்குத் தலைமை ஏற்று வந்திருக்கின்றீர்கள்.  இவ்விஷயத்தில் நீங்கள் எங்களுக்குக் கட்டளையிடக் கூடாது'' என்று கூறிவிட்டார்.

ஆயிஷா (ரலி)க்கு எதிராக அலீ (ரலி) படையெடுப்பு.

அமீருல் முஃமினீன் (அலீ-ரலி) அவர்களுக்குக் கட்டுப்பட மறுத்து அவர்களுக்கு எதிராக படை திரட்டிக் கொண்டிருந்த சிரியாவின் ஆளுநரான முஆவியா (ரலி) அவர்களைத் தன் வழிக்குக் கொண்டு வருவதற்காக, அலீ (ரலி) அவர்கள் ஆட்சித் தலைவர் என்ற முறையில் சிரியாவை நோக்கி படை திரட்டிச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள்.  இந்நிலையில் பஸராவின் நிலையைக் கேள்விப்பட்டவுடன் தனது ஆட்சியின் கீழ் இருந்த பஸராவை மீட்டாக வேண்டும், குழப்பங்களைக் களைந்தாக வேண்டும் என்ற கடமையுணர்வு மேலிட்டதால் சிரியாவுக்குச் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டு பஸராவை நோக்கிச் செல்ல முடிவெடுக்கின்றார்கள்.

பத்ரீன்கள் என்றழைக்கப்படும் பத்ருப் போரில் பங்கெடுத்த வீர ஸஹாபாக்கள் ஆறு பேர் உட்பட 900 வீரர்களுடன் படை மதீனாவிலிருந்து புறப்படுகின்றது.

அச்சமயத்தில் அப்துல்லாஹ் பின் ஸலாம் என்ற நபித்தோழர் அலீ (ரலி) அவர்களின் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்துத் தடுக்கின்றார்கள்.  அலீ (ரலி) அவர்களின் மகனார் ஹஸன் (ரலி) அவர்கள் அதற்கு முந்தைய சம்பவங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி, பஸராவுக்குச் செல்ல வேண்டாம் என்று தடுக்கின்றார்கள்.

ஆனாலும் அலீ (ரலி) அவர்கள், தான் ஆட்சித் தலைவர் என்ற முறையில் ஆற்ற வேண்டிய கடமைகளை எடுத்துச் சொல்லி மறுத்து விடுகின்றார்கள்.

மேலும் படை பலத்தை அதிகரிக்கச் செய்வதற்காக அபூபக்ர் (ரலி)யின் மகனான முஹம்மத் பின் அபூபக்ர் மற்றும் அலீ (ரலி)யின் சகோதரர் ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களின் மகனான முஹம்மது பின் ஜஃபர் ஆகிய இருவரையும் கூஃபாவுக்குக் கடிதம் கொடுத்தனுப்பி அங்கிருந்து படை திரட்டுகின்றார்கள்.

சமாதான முயற்சியும் தோல்வியும்.

மதீனாவிலிருந்து பஸரா செல்லும் வழிகளில் கூஃபா உள்ளிட்ட பல பகுதிகளிலும் அலீ (ரலி) அவர்களுக்கு ஆதரவாகப் படை திரளுகிறது.  பஸராவுக்கு வந்து சேர்ந்த பிறகு பஸராவுக்கு வெளியே உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரலி) அவர்களின் படையில் 30 ஆயிரம் முஸ்லிம்களும், அமீருல் முஃமினீன் அலீ (ரலி) அவர்களின் படையில் 20 ஆயிரம் முஸ்லிம்களும் இடம் பெற்றிருந்தனர்.

இரு படைகளும் எதிரும் புதிருமாய் சந்தித்துக் கொண்டதைப் பார்த்து வேதனையடைந்தவர்கள், இறை விசுவாசிகள் தங்களுக்குள் மோதிக் கொண்டு உயிரிழப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் அக்கறையும் கவலையும் கொண்ட நல்ல உள்ளம் படைத்தவர்கள் போரை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதற்காக பல வழிகளிலும் சமாதான முயற்சிகளை மேற்கொண்டார்கள்.  அலீ (ரலி) அவர்களும் பேச்சுவார்த்தை மூலம் சமாதானமாகப் போவதற்குத் தயாரானார்கள்.  அவர்களே கூட பல முயற்சிகளையும் மேற்கொண்டார்கள்.  ஒரு வழியாக சமாதானம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் போர் தவிர்க்கப்படும் அளவுக்குச் சென்று விடுகின்றது.

ஆனால் அலீ (ரலி) அவர்களின் படையில் வந்திருந்த உஸ்மான் (ரலி) கொலையில் சம்பந்தப்பட்டவர்கள், சமாதானம் ஏற்பட்டால் தங்களின் கதி அதோகதியாகிவிடும் என்பதை உணர்ந்து சமாதானத்திற்கு முட்டுக் கட்டையாக இருந்தார்கள்.

அதேபோல் ஆயிஷா (ரலி) அவர்களின் படையில் இருந்த சதிகாரர்கள், சமாதானம் ஏற்பட்டால் தங்களின் (அலீ (ரலி), தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி) ஆகியோரை மோத விட்டுக் காலி செய்யும்) திட்டம் நிறைவேறாமல் போய் விடும் என்ற காரணத்தால் அவர்கள் சமாதானத்திற்கு எதிராகத் திட்டம் தீட்டினார்கள்.

ஒட்டகப் போர்.

அதன் விளைவு இரண்டு பக்கத்திலும் திடீர் தாக்குதல் நடத்தப் பட்டு யுத்தம் துவங்கி விடுகின்றது.  சமாதான முயற்சிகள் அனைத்தும் வீண் போயின.  ஆயிஷா (ரலி) அவர்கள் அமர்ந்திருந்த ஒட்டகத்தின் கால் ஒடிக்கப்படுகின்றது.

அலீ (ரலி) அவர்களின் வேண்டுகோளை ஏற்று, போர்க்களத்தை விட்டு வெளியேறிய ஜுபைர் (ரலி) அவர்களை அம்ர் பின் ஜர்மூஸ் என்ற கொடியவன் கொன்று விடுகின்றான்.  அதே போல் அலீ (ரலி) அவர்களின் வேண்டுகோளை ஏற்று போர்க்களத்தில், முன் வரிசையிலிருந்து விலகி பின்புறம் சென்ற தல்ஹா (ரலி) அவர்களை மர்வான் பின் ஹகம் கொன்று விடுகின்றான்.

சொர்க்கத்திற்கு நன்மாராயம் சொல்லப்பட்ட அஷ்ரத்துல் முபஸ்ஸரா என்றழைக்கப்படும் பத்துப் பேரில் இருவரான தல்ஹா (ரலி), ஜுபைர் (ரலி) ஆகிய இருவர் உட்பட 5 ஆயிரம் பேர் இந்த ஒட்டகப் போரில் கொல்லப்படுகின்றார்கள்.  இஸ்லாமிய வரலாற்றில் ஜிஹாதின் பெயரால் முஸ்லிம்களுக்குள் மோதிக் கொண்டு ஆயிரக்கணக்கில் மடிந்த முதல் நிகழ்ச்சி இது தான்.

இதுவரை......

சகோதரர் பி.ஜெ அவர்கள் எழுதிய ஜிஹாத் பற்றிய தொடரை நாம் இது வரைக்கும் பார்த்தோம். இதன் இன்னும் சில பகுதிகள் நமக்குக் கிடைக்கவில்லை. அவை கிடைக்கும் போது அவற்றையும் தொடர்ந்து வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ்.

Post a Comment

0 Comments